இன்டர்வியூ வந்த மனைவியை ஏரிக்கரைக்கு அழைத்த கணவன்! மறக்க முடியாத பரிசு.. மாமியாருக்கு போன போன்
சென்னை: பெற்றோரின் எதிர்ப்பையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காதலித்த கைப்பிடித்த கணவனே, கண்மூடித்தனமாக மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வேலை தேடி இன்டர்வியூக்கு வந்த இளம்பெண், ஏரிக்கரைக்கு வரவழைக்கப்பட்டு கணவராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. என்ன நடந்தது? யாரிந்த பெண்?
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியைச் சேர்ந்த ஆவலஹள்ளியில் வசித்து வருபவர் கணேஷ். இவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 21 வயதே ஆன யோகினி என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது.

காதல் தம்பதி தகராறு
இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோருமே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஆனால், பெற்றோரின் பேச்சை மீறி, காதலே முக்கியம் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு மாலூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து, யாருடைய துணையும் இல்லாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் சில மாதங்கள் இவர்களது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக, எந்தப் பிரச்னையும் இல்லாமல் தான் நகர்ந்திருக்கிறது. ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
அடித்து உதைத்து சித்ரவதை
நாளாக நாளாக தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முளைக்கத் தொடங்கின. சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் இருவருக்குள்ளும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தத் தகராறுகளின் போது, கணேஷ் தனது காதல் மனைவி என்றும் பாராமல் யோகினியைக் கொடூரமாக அடித்து, உதைத்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
கணவனின் இந்தத் தொடர் அராஜகத்தையும், அடி உதை துன்புறுத்தல்களையும் தாங்க முடியாமல் யோகினி மனமுடைந்து போனார். இதனால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனுடன் கோபித்துக் கொண்டு, தனது அம்மா கல்பனாவின் வீட்டுக்குத் தஞ்சமடைந்துள்ளார்.
இன்டர்வியூ சென்ற மனைவி
மனைவி பிரிந்து சென்றதும், கணேஷ் அவரைத் தன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சமரசம் செய்யப் பார்த்துள்ளார். அத்துடன் விடாமல் நேரில் சென்றும், தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால், கணவனின் அடி உதைக்கு மீண்டும் பலியாக விரும்பாத யோகினி, அவருடன் செல்லப் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
சுயகாலில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்த யோகினி, தீவிரமாக வேலை தேடி வந்தார். அப்போது, கோலார் மாவட்டம் மாலூர் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான இன்டர்வியூ நடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, யோகினி நம்பிக்கையோடு அந்த நிறுவனத்திற்கு இன்டர்வியூவுக்கு பங்கேற்கச் சென்றார். இந்த விஷயம் கணேஷூக்கு தெரிந்து விட்டது.. உடனே அவரும் அந்தத் தொழிற்பேட்டைக்குத் தேடி வந்து, இன்டர்வியூவுக்கு வந்த மனைவியைச் சந்தித்தார். சமரசம் பேச வேண்டும் என்று சொல்லி, அருகில் இருந்த மீண்டஹள்ளி ஏரிக்கரைக்கு யோகினியை அழைத்துச சென்றுள்ளார்.
கணவன் தந்த மறக்க முடியாத பரிசு
ஏரிக்கரையில் உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகினியைச் சரமாரியாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த யோகினி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகும் கணேஷ் தப்பியோடவில்லை. நேராக தனது மாமியார் கல்பனாவுக்குப் போன் செய்து, உங்களது மகளைக் கொலை செய்துவிட்டேன் என்று திமிராக கூறியுள்ளார். இதைக் கேட்டுப் பதறிப்போன கல்பனா, உடனே மாலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டு அலறியடித்தபடி ஏரிக்கரைக்கு ஓடிவந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், யோகினியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு அங்கேயே நின்றிருந்த கணேஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். காதலித்துத் திருமணம் செய்த கணவனே, வேலைக்கு வந்த மனைவியைக் குத்திக் கொன்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications