துபாயிலிருந்து இனி தங்கத்தை கொண்டு வரலாம்.. வரியே இல்லை! மத்திய பட்ஜெட்டில் ’இதை’ கவனிச்சீங்களா?
சென்னை: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முக்கியமான வரிவிலக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரியின்றி இந்தியாவுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படும் பொருட்களின் மதிப்பு உச்சவரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை வாசித்துள்ள நிதியமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முக்கியமான வரிவிலக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விதிமுறை மாற்றங்கள் அடங்கிய 'பயணிகள் உடைமைகள் விதிமுறைகள் - 2026' என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026
இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள், தங்களுடன் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்களை மட்டுமே வரி செலுத்தாமல் கொண்டு வர அனுமதி பெற்றிருந்தனர். தற்போது இந்த வரம்பு ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மின்னணு சாதனங்கள், பரிசுப் பொருட்கள், தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை கூடுதல் வரி சுமை இன்றி கொண்டு வர முடியும். அதே நேரத்தில், வெளிநாட்டை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் வரிவிலக்கு
இதுவரை அவர்கள் ரூ.15,000 மதிப்புள்ள பொருட்களை மட்டும் வரியின்றி கொண்டு வர அனுமதி பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு ரூ.25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்திய சுற்றுலாவை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன், நகைகள் தொடர்பான விதிகளும் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக வசித்து வரும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர், பெண்கள் என்றால் 40 கிராம் வரை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோக நகைகளை வரியின்றி கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.
டியூட்டி ஃப்ரீ வரம்பு உயர்வு
ஆண்களுக்கு இந்த வரம்பு 20 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகளை மீறினால், கூடுதல் நகைகளுக்கு சுங்கவரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், விமான நிலையங்களில் பயணிகள் சந்திக்கும் சுங்கவரி தொடர்பான குழப்பங்களை குறைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து குடும்பத்தினருக்காக பரிசுகள் வாங்கி வரும் இந்தியர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்த வரி குறித்த புகார்கள், இந்த அறிவிப்பின் மூலம் ஓரளவுக்கு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NRI பயண சலுகை
பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், இந்த வரிவிலக்கு உயர்வு வெளிநாட்டு பயணிகள் செலவினத்தை ஊக்குவிக்கும் என்றும், விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளுக்கும் மறைமுகமாக ஆதரவாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், சட்டவிரோதமாக அதிக மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், 2026-27 மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நேரடி நன்மையை வழங்கும் முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications