கனவு பலிக்க சான்ஸ் இல்லையாமே.. டெல்லியில் காத்திருந்த முக்கிய அதிமுக "புள்ளி".. ஆஃப் செய்த மேலிடம்?!
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 முக்கியமான புள்ளிகள் மத்திய அமைச்சர் பதவிக்கான ரேஸில் உள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் கடந்த சில தினங்களாக தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
பிரதமரின் அமைச்சரவையில் 79 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது 12 அமைச்சர்கள் இடம் காலியாக இருக்கிறது. 57 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். இந்த காலியிடங்களை நிரப்பும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.
திட்டம்
அதோடு ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் சிலரை தூக்கிவிட்டு புதிய எம்பிக்களை, ராஜ்ய எம்பிக்கள் சிலரை அமைச்சராக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாராயண் நாரே, அசாம் முன்னாள் முதல்வர் சர்ப்பனந்த் சோனோவால், எம்பி ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி தம்பிதுரை, அதிமுக லோக்சபா எம்பி ஓபி ரவீந்திரநாத் ஆகியோர் அமைச்சர்களுக்கான ரேஸில் உள்ளனர்.
ஆனால்
இதில் எம்பி ஓபி ரவீந்திரநாத் கடந்த சில மாதங்களாகவே மத்திய அமைச்சர் ஆகும் முயற்சியில் இருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி கட்சியான பாஜக மூலம் இதற்காக தீவிரமாக முயன்று வந்ததாக தகவல்கள் வந்தன. முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களுடன் ஓ. பன்னீர்செல்வம் நெருக்கமாக சென்றதும், இவர்கள் மூலமாக எம்பி ஓபி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி பெறுவதற்காக டெல்லி மேலிடத்திற்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வந்தன.
தம்பிதுரை
ஒரு பக்கம் ரவீந்திரநாத் அமைச்சர் பதவிக்கு முயன்ற நிலையில், இன்னொரு ராஜ்ய சபா எம்பி தம்பிதுரை அமைச்சர் பதவிக்காக முயன்று வந்ததாகவும் தகவல்கள் வந்தன. டெல்லியிலேயே கடந்த சில நாட்களாக தங்கி இவர் அமைச்சர் பதவிக்கு முயன்றதாக தகவல்கள் வந்தன. தனக்கு நெருக்கமான சில பாஜக தலைவர்கள் மூலம் பாஜக மேலிடத்தில் அமைச்சர் பதவியை பெற இவர் முயன்றதாக கூறப்படுகிறது.
பாஜக மேலிடம்
தொடக்கத்தில் தமிழ்நாட்டின் எம்பிக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் முடிவில்தான் பாஜக மேலிடம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள மற்ற வட மாநில கட்சிகள் பல அமைச்சர் பதவி கேட்டுள்ளது. முக்கியமாக பாஜகவிற்கு நீண்ட காலமாக ஆதரவு அளித்து வரும் முக்கிய வடஇந்திய கட்சிகள் சில அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம்பிடித்து உள்ளன. இதனால் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியாத நிலையில் பாஜக இருப்பதாக தெரிகிறது.
காத்திருந்தார்
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் பல மூத்த பாஜக தலைவர்கள் மூலம் தம்பிதுரை அமைச்சர் பதவிக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் பலரும், எங்கள் கையில் முடிவு இல்லை, டாப் தலைவர்கள்தான் இறுதி முடிவு எடுக்க போகிறார்கள், அவர்களின் ஆலோசனையே இன்னும் முடியவில்லை, எங்கள் சிபாரி எல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறி கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
நோ சான்ஸ்
இதனால் தம்பிதுரைக்கு பெரும்பாலும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இவருக்கு டெல்லி மேலிடம் "ரெட் சிக்னல்" கொடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் ரவீந்திரநாத் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, இவர் "ஹோல்டில்" வைக்கப்பட்டு இருக்கிறார். இறுதி லிஸ்ட் தயாராகும் போதே இவர் அமைச்சராவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.