பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் உறுதியாக அமையும் என்கிறார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்திய.
சென்னை: சென்னை அருகே பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவது உறுதி; பரந்தூர் விமான நிலையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு அரசுதான் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மேற்கு பகுதி பார்க்கிங் இடத்தில் 24 மணி நேர உணவு விடுதியும் திறந்து வைக்கப்பட்டது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசியதாவது: சென்னை நகரம் கலாச்சாரத்தின் மிக நீண்ட பாரம்பரியத்தில் ஒன்றாகும். உலகளாவிய நிலப்பரப்பில் இது உண்மையிலேயே ஒரு ரத்தினம் . , சென்னை தென்னிந்தியாவின் நுழைவாயில். கல்விக்கான சிறந்த மையம்; ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான மையம்.
பிரதமர் மோடி தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் . கடந்த எட்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நடவடிக்கையால் 73 விமான நிலையங்களை கட்டி இருக்கிறோம். இந்த பிப்ரவரி மாதத்தில் 148வது விமான நிலைய திறப்பு விழா நடைபெறும்.
தமிழ்நாட்டில் 9 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன . விமானங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் 2000 ஆக அதிகரிக்கும் . ரூ2,500 கோடியில் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த உள்ளோம். அதில் முதல் கட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும், இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு இறுதியிலும் தயாராகிவிடும். விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது, இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 9 விமான நிலையங்களையும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரந்தூர் விமான நிலையம் அமைவது உறுதி. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு அரசுதான் தீர்வு காண வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு 633 ஏக்கர் தேவை. இதுவரை 540 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 700 ஏக்கர் நிலம் தேவை. இதுவரை 604 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.












Click it and Unblock the Notifications