தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை... கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்..!
சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளுக்காக ஏலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் இந்த பதிலை தெரிவித்திருக்கிறார்.

கேள்வி
"தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா?"என்று திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

பதில்
அதற்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி ஆகஸ்டு 2-ம் தேதி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், "இந்திய அரசாங்கம் 2021 ஜூன் 10 -ம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுதும் 75 இடங்களில் 13 ஆயிரத்து 204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது.''

பணிகள் இல்லை
''இவற்றில் இரு பெட்ரோலிய சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போராட்டம்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கடந்த காலங்களில் டெல்டா பகுதி விவசாயிகள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என தகவல் பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட துறையின் ஒன்றிய இணை அமைச்சர் மூலம் விளக்கம் பெற்றிருக்கிறார் கனிமொழி.












Click it and Unblock the Notifications