எல்லாம் திறந்தாச்சு.. ஆனா அரைகுறையா இருக்கே.. மிச்சமிருக்கிற 5 மாசத்துக்கு வழி? குழப்பத்தில் மக்கள்!
இ-பாஸ் ரத்தாகியும் தமிழக மக்கள் குழம்பி போயுள்ளனர்
சென்னை: இ பாஸ் ரத்தாகிவிட்டது, பஸ் ஓடி கொண்டிருக்கிறது.. ஆனாலும் தமிழக மக்கள் குழம்பி போயுள்ளனர்!
இ பாஸ் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எத்தனையோ முறை கோரிக்கைகளை விடுத்தன.. அழுத்தம் தந்தன.. அறிக்கைகளை தொடுத்தன.. விமர்சனங்களை முன் வைத்தன!
Recommended Video
ஆனாலும் எடப்பாடியார் அசரவே இல்லை.. எத்தனை பேர் குற்றஞ்சாட்டினாலும், ஏன் பொதுமக்களே புலம்பினாலும், இ பாஸ் ரத்து செய்வதில் அவசரம் காட்டவில்லை.. மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தை தடை செய்யக் கூடாது என மத்திய அரசு சொல்லியும், முதல்வர் இதை உடனே அமல்படுத்தவில்லை.

டெல்லி
மாறாக, 2 விஷயங்களில் இதுகுறித்து அறிய முற்பட்டார்.. அதில் ஒன்றுதான், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசிணுயது.. அதன்பிறகு இ பாஸ் முறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதே தவிர, ரத்து செய்யப்படவில்லை.

கலெக்டர்கள்
மற்றொன்று, முதல்வரே நேரடியாக மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டார்.. மாவட்ட கலெக்டர்கள், சுகாதார துறையினர், மகளிர் அமைப்புகள், விவசாயிகள் உள்ளிட்ட என அனைத்து தரப்பினரையும் தொற்று பாதித்த விவரங்கள், நிலவரங்களை கேட்டறிந்தார்.. இதற்கு பிறகே அனைவருக்கும் இ பாஸ் என்பதை அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அறிவிப்பு
முதல்வர் அத்துடன் நிறுத்தவில்லை, உலக சுகாதர நிறுவனத்தில் பணியாற்றும் தமிழக மருத்துவ நிபுணர்களிடம் அடிக்கடி பேசிவருகிறார் என்பதும் பாராட்டத்தக்கதே.. ஆனால், இந்த இ - பாஸ் ரத்து செய்யப்பட்டதில், சில முரண்பட்ட கருத்தக்கள் மக்களிடம் எழுந்து வருகிறது.. 5 மாசமாக இருந்த தொற்று பாதிப்பைவிட, இப்போதுதான் தொற்று அதிகமாகி வருகிறது.

தலைவலி
இந்த நேரத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டதற்கு பதிலாக, இதை 5 மாசத்துக்கு முன்னாடியே செய்திருக்கலாமே? இவ்வளவு நாள் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொற்று முழுவதுமாக ஒழிந்திருக்க வேண்டும், மாறாக அதிகமாகி உள்ளது. இந்த நேரத்தில் இ பாஸ் ரத்து செய்யபப்ட்டால் கிராமங்கள், சிறு நகரங்களில்கூட பாதிப்பு அதிகமாகிவிடும் என்பதே உண்மை.. மறுபடியும் தொற்று அதிகமாகிவிட்டால், அது நிச்சயம் அரசுக்குதான் தலைவலியாக வரும் என்பதும் உண்மையே.

யதார்த்தம்
ஒருபக்கம் தளர்வு கேட்கிறார்கள், இன்னொரு பக்கம் தளர்வு வேண்டாம் என்கிறார்கள், இதற்கு நடுவில் அரசு என்னதான் செய்யும் என்ற யதார்த்தத்தையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.. இந்த இரண்டில் ஒரு முடிவை அரசு எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது.. ஆனால் பொது மக்கள், எதிர்க்கட்சிகள், மத்திய அரசு என இப்படி மூன்று பக்கமும் எதிர்ப்பும் நெருக்கடியும் வந்ததாலேயே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒருவேளை இ பாஸ் முறையை ரத்து செய்தபிறகு, தொற்று பாதிப்புகள் அதிகமானால் மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

போக்குவரத்து
மக்களோ, ரொம்ப குழம்பி போய் உள்ளனர்.. மாவட்டத்துக்குள்ளேயே பஸ் விடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லையே.. எப்படி எங்களால் எல்லா ஊர்களுக்கும் போக முடியும்? தேனியில் இருந்து மதுரைக்கு 70 கிலோ மீட்டர்தான் என்றாலும், இதற்கு கூட போக முடியவில்லை.. இதேதான் ஊட்டிக்கும், கோயம்புத்தூருக்கும் நிலைமை... முன்பாவது மண்டல வாரியாக பஸ் விட்டார்கள், அதில் பிரயோஜனமும் இருந்தது.. இப்போது மாவட்டத்துக்குள்ளேயே பஸ்சுல போயி என்ன செய்ய போறோம்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பொருளாதாரம்
யார் கையிலும் பணம் இல்லாத நிலையில், வங்கியில் பணம் கட்ட சொல்றாங்களே.. இந்த 5 மாசம் வாழ்வாதாரம் போச்சு.. இப்போ இயல்பு நிலைக்கு எங்களால் வர முடியாமல் உள்ளோமே என்ற புலம்பலும் ஆங்காங்கே எழுந்து வருகிறது. என்னதான் புலம்பினாலும் மக்கள் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.. அரசு பொருளாதாரத்தை சீராக்க எதையாவது செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது. மக்களுக்கும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க முடியாது. அப்படி இருந்தால் வீட்டுப் பொருளாதாரம் மோசமாகி விடும்.

பொறுப்புணர்வு
எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் உள்ளேயே இருந்து வாழவும் முடியாது. வெளியில் வந்துதான் ஆக வேண்டும். அதேசமயம், அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். பஸ்கள் ஓடும், இ பாஸ்கள் ரத்தாகும், கடைகள் திறக்கப்படும், இயல்பு வாழ்க்கை கொண்டு வரப்படும்.. ஆனால் கொரோனாவும் கூடவே இருக்கும். மக்களாகிய நாம்தான் நமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். இனிமேல் அதுதான் வாழ்க்கையாக இருக்கும்.. ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே கொரோனா அரக்கனை வெல்ல முடியும்.
இது தவிர்க்க முடியாத மாற்றம்தான்.. சந்தித்துதான் ஆக வேண்டும்.












Click it and Unblock the Notifications