தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அதிரடி.. தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்க உத்தரவு
சென்னை: தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைகழகங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. நடப்பு ஜூன் மாதத்திலேயே தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என, தங்கள் உறுப்பு கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உத்தரவை பிறப்பித்துள்ளன.
பல்கலை கழக மானிய குழு விதிகளின்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தகுதி தேர்வவான நெட் அல்லது, மாநில தகுதி தேர்வான செட் இவற்றில் தேர்ச்சி பெற்றால் தான், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற அனுமதிக்கப்படும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது.
தகுதி தேர்வு எழுதாதவர்கள் 2009 அல்லது அதற்கு முன்னர் எம்ஃபில் அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை பின்பற்றி சென்னை பல்கலைகழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், பாரதியார் பல்கலைகழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா, பெரியார் மற்றும் திருவள்ளுவர் பல்கலைகழகங்கள் உள்ளிட்டவை தங்களது உறுப்பு கல்லூரிகளுக்கு மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 2,500 பேராசிரியர்கள் தகுதியற்றவர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் என சென்னை பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் சுமார் 30 சதவீத பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிகளின்படி, தகுதியற்றவர்கள் என்பதை கண்டறிந்த சென்னை பல்கலைக்கழகம் அதிர்ச்சியடைந்தது. நகர்புறங்களில் உள்ள கல்லூரிகள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களை கொண்டுள்ளதும், புறநகரில் நிலைமை மோசமாக உள்ளதையும் சென்னை பல்கலைக்கழம் ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளது
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகம், தங்களது 90 உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் அடுத்த நெட் அல்லது செட் தேர்வெழுதி தேர்ச்சி பெற உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளது. குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் கிடைக்காததற்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.
மொத்தமுள்ள 8,500 பேராசிரியர்களில் சுமார் 2,500 பேராசிரியர்கள் பல்கலைகழக மானிய குழு விதிகளின்படி தகுதி பெறாதவர்கள் என கூறியுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு அமல்படுத்தியுள்ள விதிகளின்படி, உதவி பேராசிரியர்களுக்கு ரூ.65,000 சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பெரும்பாலான கல்லூரிகளில் ரூ.10,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே தான் தகுதிவாய்ந்த பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.