பெருங்களத்தூர் டூ செங்கல்பட்டு வரை தீராத நெருக்கடி.. சென்னைவாசிகளுக்கு தீர்வு தான் என்ன ?
சென்னை:பெருங்களத்தூர் டூ செங்கல்பட்டு வரை எப்போது விடுமுறை நாட்கள் வந்தாலும் பிரச்சனையாகவே உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த சாலையை பயன்படுத்துவதுதான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டியது மிக அவசியம் ஆகும்.
சென்னையை பொறுத்தவரை தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வழியான திருச்சி சாலை அதாவது ஜிஎஸ்டி சாலை தான் மோசமான போக்குவரத்து நெரிசலை தினமும் சந்திக்கிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பெரும் துயரத்தை வாகன ஓட்டிகள் அனுபவிக்கிறார்கள். ஆலந்தூரை கடந்து விமான நிலையத்தை நோக்கி நகரும் வாகனங்கள், பல்லாவரம் குரோம்பேட்டை, தாம்பரத்தை கடப்பதற்குள் பெரும்பாடாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்: நகருக்குள் பிரச்சனை இப்படி என்றால், தாம்பரத்திற்கு அந்த பக்கம் பீக் அவர்ஸில் நிலைமை கடினமாக இருக்கும். கோயம்பேட்டில் வாகனத்தை எடுத்து ஊருக்குள் வந்து அவர் செங்கல்பட்டை அடைய குறைந்தது இரண்டரை மணிநேரம் வரை ஆகும். இதுதான் எதார்த்தம். விடுமுறை நாட்கள் என்றால், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டை தாண்டுவதற்கு மணி கணக்கில் காத்திருக்க வேண்டும்.
சென்னையில் இருந்து போகும் போது இப்படி என்றால், வரும் போதும் இதேபோல் பரனூர் முதல் தாம்பரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று சென்னை திரும்பியவர்களை கேட்டால், அவர்கள் பட்ட வேதனையை கண்டிப்பாக சொல்வார்கள். 5 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் ஊர்ந்து வந்ததையும், நத்தை போல் நகர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டதையும் விவரிப்பார்கள்.
விடுமுறை நாட்கள்: ஆயுதபூஜை, தீபாவளி, சுதந்திர தினம், பொங்கல், சித்திரை திருவிழா, தேர்வு விடுமுறை நாட்கள், நீண்ட விடுமுறை நாட்கள், சனி ஞாயிறு, முகூர்த்த நாட்களில் சென்னையில் இருந்து போவதும், சென்னைக்கு விடுமுறை முடிந்து வருவதும் பெரும் துயரமானது. ஒருபக்கம் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருக்கும். ரயில்களில் இடமே இருக்காது, அரசு பேருந்துகள் தான் ஒரே ஆறுதல், ஆனால் தாங்க முடியாத நெரிசலை தாண்டித்தான் போய் வர முடியும். சொந்த வாகனங்களில் செல்வோர் நிலைமை மிக மோசமானதாக இருக்கும். இதனால் சென்னையில் இருந்து ஊருக்கு போய் வருவது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.
பஸ் பே: சென்னை தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள பெருநகரம். அதாவது தமிழ்நாட்டின் நுழைவு வாயிலாக உள்ள சென்னைக்கு மிக முக்கியமான சாலை என்றால் ஜிஎஸ்டி சாலை தான். இன்றைய சூழலில் சேலம் மார்க்கமாக கோவை செல்வோருக்கு இன்னொரு பாதை ஏற்படுத்தலாம். இதேபோல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அமைக்கப்பட உள்ள மேம்பால பணிகளை உடனே தொடங்க வேண்டும். இதேபோல் ஹைதராபாத் நகரத்தில் உள்ளது போல், சென்னையில் பஸ் பே சாலைகளை ஏற்படுத்தலாம். நகரின் முக்கிய பகுதியில் ஏறினால் விமான நிலையம் வரை அங்கு பஸ் பே அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேம்பால சாலை அமைக்கப்பட்டிருக்கும். இடையில் எங்கும் இறங்க முடியாது. நேராக நகரத்தை விட்டு வெளியே சென்றுவிடலாம். அதுபோல் இங்கும் உயர்மட்ட சாலை ஏற்படுத்தலாம்.
கிழக்கு கடற்கரை சாலை: அதேபோல் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை போகும் வழிக்கு பதிலாக கிழக்கு கடற்கரை சாலை அல்லது ஓஎம்ஆர் சாலை பகுதியில் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி செங்கல்பட்டுடன் அரசு இணைக்க வேண்டும். இதனை செய்தால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ஏனெனில் 90 சதவீதம் சென்னை வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாகவே சென்று தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கு செல்வதால் அந்த சாலை தாங்க முடியாத அளவிற்கு நெரிசலை சந்திக்கிறது.
கிளாம்பக்கம் பேருந்து நிலையம்: கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தால் பிரச்சனை ஜிஎஸ்டி சாலையில் தீருமா என்றால் நிச்சயம் தீராது.. ஏனெனில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் கேளம்பாக்கம், வண்டலூர் , காஞ்சிபுரம், சென்னை சாலை சந்திக்கும் இடத்தில் உள்ளது. எனவே அதிகப்படியான வாகனங்கள் அங்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம். மக்களும் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கம் வரை சொந்த வாகனங்களில் வருவார்கள்.. இன்னமும் நெரிசல் நகர் பகுதிகளில் அதிகமாகும். அதேநேரம் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் ஊருக்குள் வராது என்பதால், அந்த வாகனங்களால் ஏற்படும் நெரிசல் ஓரளவு குறையும். ஆனால் நிரந்தர தீர்வு என்பது, செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உயர்மட்ட சாலையை விரைந்து அமைப்பதாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications