உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்!
சென்னை: லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். இது உண்மைதான், ஆனால் தமிழ்நாட்டிற்கான நியாமான எண்ணிக்கை கிடைக்குமா? அல்லது உத்தரப் பிரதேசத்திற்கு அதிக எண்ணிக்கை கிடைக்குமா? என்பதே தற்போதைய கேள்வி.
பாஜகவினர் சொல்வதை போல 10 தொகுதிகள் என்பது, தமிழ்நாட்டிற்கான நியாயமான எண்ணிக்கை கிடையாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன?
கடந்த காலங்களில், அப்போது இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப லோக்சபாவில் 543 என்கிற எண்ணிக்கையில் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இப்போது மக்கள் தொகை 140 கோடியை கிராஸ் செய்து போய்க்கொண்டிருக்கிறது. எனவே தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதற்கேற்ப பிரிக்கப்பட வேண்டும். இதுதான் தொகுதி மறுவரையறை. இந்த ஐடியா நல்லதானே இருக்கு? இதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழலாம்.
பிரச்சனை இருக்கிறது. தொகுதி மறுவரையறையை எதன் அடிப்படையில் நடத்தப்போகிறார்கள் என்பதுதான் பிரச்சனை! மக்கள் தொகை அடிப்படையில் நடத்துகிறார்கள் எனில், தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு நியாயமான ஒதுக்கீடு கிடைக்குமா? என்பது சந்தேகம்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது எனில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான எம்பி தொகுதிகள் எண்ணிக்கை 130லிருந்து 166ஆக அதிகரிக்கும். என்னப்பா இது? கேட்க நல்லாதானே இருக்கு.. என யோசிக்கலாம். ஆனால், மொத்த எம்பி இடங்கள் அதிகரிக்கப்படும்போது, இந்த 166 என்கிற எண்ணிக்கை, முன்பு இருந்த 130ஐ விட 20% குறைவாகும்.
தமிழ்நாட்டுக்கு பாதிப்பு
தமிழ்நாட்டில் இப்போது 39 தொகுதிகள் இருக்கின்றன. மறுவரையறை நடந்தால்.. இது 49 ஆக உயரும். ஆனால்,
- 543 தொகுதிகள் என இருக்கும்போது தமிழ்நாட்டின் பங்களிப்பு 7.2% ஆக இருந்தது
- 850 தொகுதிகளாக உயரும்போது தமிழ்நாட்டின் பங்களிப்பு 5.8% ஆக சுருங்கிவிடும்
உத்தரப் பிரசதேசத்தின் நிலை
ஆனால், மறுபுறம் வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும். உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் தற்போது இந்த 5 மாநிலங்கள் மொத்தமாக 200 இடங்களைக் கொண்டுள்ளன. லோக்சபாவில் இந்த மாநிலங்களின் பங்கு 37%.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், இந்த மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை 367 ஆக அதிகரிக்கும். லோக்சபாவில இந்த மாநிலங்களின் பங்கு 43% ஆக உயரும். குறிப்பாக உத்தரப்பிரதேசம் தற்போது 80 தொகுதிகளை கொண்டிருக்கிறது. மறுவரையறைக்கு பின், 143 தொகுதிகளை பெறும். இதன் மூலம் லோக்சபாவில் இதன் பங்களிப்பு 14.7%லிருந்து, 17% ஆக அதிகரிக்கும்.
தென் மாநிலங்களின் நிலை
உத்தரப் பிரதேசம் மட்டும் அதிகரிக்கும், நம்முடைய பங்களிப்பு மட்டும் குறையுமா? இது என்னங்க நியாயம்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வரையறை நடத்தப்பட்டால், எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒன்று சேர்ந்தாலும், வட இந்தியாவின் 4-5 மாநிலங்களுக்கு கூட நம்மால் சரி சமமாக வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications