நாடு முழுவதும் GPay, Phonepe, Paytm சேவை பாதிப்பு.. பணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி!
டெல்லி: நாடு முழுவதும் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட முக்கிய யுபிஐ செயலிகள் சரிவர இயங்கவில்லை.
இது தொடர்பாக ஏராளமான பயனர்கள் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யுபிஐ செயலி வேலை செய்யவில்லை என்றும், இதனால் கடைகளில் பணம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வந்தனர்.

இன்று இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்த இந்த பிரச்சனை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. பெரும்பாலும், பணம் செலுத்தும்போது சிக்கல் எழுவதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
HDFC வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளின் UPI சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் டிஜிட்டல் கட்டண பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இது நான்காவது பெரிய யுபிஐ சேவை செயலிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது பரவலாகப் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவை குறித்து மக்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications