வட இந்தியா தென் இந்தியா என்று நாட்டைப் பிரிக்காதீங்க.. பாமக பாலு வாதத்திற்கு ஹைகோர்ட் பதில்
சென்னை: என்.எல்.சி நிர்வாகத்தில் வட இந்தியர்களே அதிகம் வேலை செய்கின்றனர், உறுதிப்படி தமிழர்களுக்கு வேலை தரப்படவில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு,வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழர்கள் பலர் பெங்களூரு ஐடி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் வட இந்தியா தென் இந்தியா என்று நாட்டைப் பிரிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி கிராம பகுதியில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 16 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை இதுவரை பயன்படுத்தாமல் என்.எல்.சி.நிறுவனம் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எந்த ஒரு முன் அறிவிப்பும் கொடுக்காமல் என்.எல்.சி.நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கடந்த 26ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்களை புல்டோசர் இயந்திரங்கள் கொண்டு சேதப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
16ஆண்டுகள் கழித்து திடிரென்று வந்து தனது நிலத்தை சுவாதீனம் எடுக்கிறோம் என்று கூறி பயிர்களை சேதப்படுத்தி உள்ளதால் எங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது சட்டப்படி தவறானது என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.
எனவே 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தாத என்.எல்.சி நிறுவனம், தன்னிடம் கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை நிலத்தில் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்றும், நிலத்தை தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கே.பாலு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு முறையீடு செய்தார்.இதனை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை இன்று பிற்பகல் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இதன்படி இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி தரப்பிலும், விவசாயி முருகன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். விவசாயி முருகன் தரப்பில் ஆஜரான பாமக வழக்கறிஞர் பாலு, என்.எல்.சி நிர்வாகத்தில் வட இந்தியர்களே அதிகம் வேலை செய்கின்றனர், தமிழர்களுக்கு உறுதி அளித்தபடி வேலைதரப்படவில்லை என்று வாதிட்டார். மேலும் பரவனாறு திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் வழக்கறிஞர் பாலுவாதிட்டார். அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழர்கள் பலர் பெங்களூரு ஐடி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் வட இந்தியா தென் இந்தியா என்று நாட்டைப் பிரிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.
மேலும் என்எல்சியிடம் நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், நிலம் எடுத்த பின் சாகுபடியை அனுமதித்தது ஏன் எனறும் கேள்வி எழுப்பியது. இதனிடையே செப்டம்பர் 15க்குள் பயிர்களை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மூன்று தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, என்எல்சி நிறுவனத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளை மறுதினம் ஒத்தி வைத்து ஒத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், " என்எல்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கெல்லாம் நாங்கள் கூட்டங்கள் நடத்தி, கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார். இந்த வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாக என்எல்சி நிறுவனம் ஒரு பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுவரை கைப்பற்றப்பட்டிருக்கக்கூடிய நிலங்கள், இந்த நிலம் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு எந்த அளவிற்கு இழப்பீடு தர இருக்கிறார்கள் என்ற விவரங்களை எல்லாம் எடுத்துரைக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கின் இறுதி விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தார். அதற்குள்ளாக அங்கே பாதிப்புகள் இல்லாத வகையில், உங்களுடைய பணிகள் நடைபெற வேண்டும் என்று நீதிபதி தெளிவு படுத்திருக்கிறார்.
அங்கு பரவனாரை பொறுத்தவரையில் விளைநிலங்கள் வழியாத்தான் செல்கிறது. அந்த பணியை செய்ய அனுமதிப்போம் என்று சொன்னால், நிச்சயமாக விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற செய்தியை நாங்கள் சொல்லியிருக்கிறோம். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு நாளை மறுதினம் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்" இவ்வாறு வழக்கறிஞர் பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications