இந்தியர்கள் வேண்டவே வேண்டாம்.. மொத்தமாக பணி நீக்கிய அமெரிக்க நிறுவனம்.. 4 நிமிட ஜூம் காலில் அடாவடி
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் இந்திய ஊழியர்களை திடீரென்று பணி நீக்கம் செய்துள்ளது. வெறும் 4 நிமிட ஜூம் காலில் அவர்கள் அனைவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். ஏன்? என்ற கேள்வி கூட கேட்க விடாமல் அவர்கள் அனைவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது வன்மத்தை கக்கி வருகிறார். நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.

இது போதாது என்று அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச் 1பி விசா கட்டணத்தை டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இந்த எச் 1பி விசா திட்டத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பயன்பெற்றவர். தற்போதைய கட்டண உயர்வால் இந்தியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.
இப்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து அடாவடி வேலையில் ஈடுபட்டு வரும் நிலையில் தான் அமெரிக்க நிறுவனம் ஒன்று நம் நாட்டை சேர்ந்தவர்களை 4 நிமிட ஜூம் காலில் பணி நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் வீட்டில் இருந்து பணியாற்றியவர்கள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ‛ரெடிட்' தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛அந்த நாள் எங்களுக்கு வழக்கமான பணி நாளாக தான் தொடங்கியது. காலை 9 மணிக்கு வழக்கம்போல் லாக்-இன் செய்தோம். காலை 11 மணிக்கு கட்டாய மீட்டிங் என்று அழைப்பு வந்தது. இந்த மீட்டிங் தலைமை ஆபரேட்டிங் அதிகாரியுடன் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மீட்டிங்கில் பங்கேற்றோம். அனைவரின் கேமரா மற்றும் மைக்ரோபோன்கள் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து பணியாற்றுவோரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தனர்.
இந்த பணி நீக்கம் என்பது பெர்மாமன்ஸ் அடிப்படையில் கிடையாது. அலுவலக உள்விஷயங்களை மாற்றம் கொண்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். எங்களை ஒரு கேள்வி கூட கேட்க அனுமதிக்கவில்லை. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் வெறும் 4 நிமிட ஜூம் காலில் பணி நீக்கம் செய்துவிட்டது.
இதுதொடர்பாக முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை. நோட்டீஸ் பிரியட்டும் தரவில்லை. 11 மணிக்கு தொடங்கிய ஜூம் கால் 11.04 மணிக்கு முடிந்தது. அதற்குள் பணி நீக்கம் செய்துவிட்டனர். அதன்பிறகு அனைவருக்கும் பணி நீக்கம் தொடர்பான மெயில் அனுப்பி வைக்கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் ஆறுதலாக விஷயம் என்னவென்றால் அந்த நிறுவனம் அக்டோபர் மாதத்துக்கான சம்பளத்தை இந்த மாத இறுதியில் வழங்குவதாகவும், பெண்டிங் லீவ் இருந்தால் அதற்கும் சேர்த்து சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் இந்த திடீர் பணி நீக்க நடவடிக்கையால் இந்திய ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாற்று வேலையை உடனடியாக தேட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பதிவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications