24 மணி நேரத்தில்.. உலக அரசியலே மாறுகிறது.. அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்
சென்னை: உலகையே உலுக்கி வந்த மேற்காசியப் போர் ஒருவழியாக முடிவுக்கு வரப்போகிறது. அமெரிக்காவும் ஈரானும் தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து, ஒரு "இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில்" (Interim Peace Agreement) கையெழுத்திடத் தயாராகிவிட்டதாக பிரத்தியேகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் இரு நாட்டுத் தலைவர்களும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரே நேரத்தில் வெளியிடவுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உச்சத்தில் இருந்தது. எந்த நேரத்திலும் ஒட்டுமொத்தப் பிராந்தியமும் போர்க்களமாக மாறலாம் என்ற பயம் நிலவியது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் தூதரக அதிகாரிகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே தூதுவராக இருந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வார இறுதியில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த மிக முக்கியமான கூட்டத்தில், இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

திரைக்குப் பின்னால் உழைத்த முக்கியப் புள்ளிகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆகிய இரு தரப்பிலும் உள்ள மிக முக்கியப் பொறுப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளனர்.
ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வமான அம்சங்களை இறுதி செய்துள்ளார். அமெரிக்கத் தரப்பில், அதிபர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் களம் இறக்கப்பட்டனர். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானுடன் தொடர்ந்து பேசி, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான முடிவுக்கு வழிவகுத்துள்ளனர். இந்தியாவின் புதுடெல்லியில் இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், "இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன, எந்த நேரத்திலும் பெரிய செய்தி வரலாம்" என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 30 முதல் 60 நாட்களில் என்ன நடக்கும்?
இப்போது கையெழுத்தாகப் போகும் ஒப்பந்தம் என்பது நிரந்தரமான ஒன்று அல்ல. இது ஒரு தற்காலிக "நோக்கக் கடிதம்" (Letter of intent) ஆகும். அதாவது, உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு, அமைதியாகப் பேசுவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான் இது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 30 முதல் 60 நாட்களுக்கு இரு நாடுகளும் எந்தவித மோதலிலும் ஈடுபடக் கூடாது. இந்த அமைதிக் காலத்தில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியப் பாதையாக இருக்கும் "ஹார்முஸ் நீரிணை" (Strait of Hormuz) பகுதியை எந்தவிதக் கட்டணமோ அல்லது தடைகளோ இல்லாமல் பன்னாட்டு வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக ஈரான் திறந்து வைக்க வேண்டும். இதற்குப் பிரதிபலனாக, முடக்கப்பட்டுள்ள ஈரானின் சில வங்கிச் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக அனுமதியை வழங்கும்.
இந்த 30 முதல் 60 நாட்களுக்குள், இரு நாடுகளின் அதிகாரிகளும் அமர்ந்து மிகவும் சிக்கலானப் பிரச்சினைகளான ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிரந்தர முடிவுகளைப் பேசித் தீர்ப்பார்கள்.
இரு தரப்பிலும் இருக்கும் தீவிரப் போக்காளர்கள் கடைசி நேரத்தில் ஏதேனும் முட்டுக்கட்டைப் போடாத வரை, அடுத்த 24 மணி நேரத்தில் வெளியாகப்போகும் இந்த அறிவிப்பு, பல மாதங்களாக நீடித்து வந்த மேற்காசியப் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications