தமிழ்நாட்டில் லெதர் உற்பத்தி துறையில் 75,000 பேர் வேலையிழக்கும் அபாயம்! அமெரிக்க வரியால் பாதிப்பு
சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரியை விதித்திருக்கிறது. இதனால், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், அமெரிக்காவில் 50% கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. எனவே வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க அரசு உதவ வேண்டும் என்று தோல் பொருள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த வரி காரணமாக லெதர் தொழில் துறையில் சுமார் 75,000 பேர் வேலையை இழக்க நேரிடலாம் எனும் அச்சம் எழுந்திருக்கிறது.
இந்தியாவின் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு. இங்கிருந்துதான் சுமார் 30% தோல் பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் வரி தமிழ்நாட்டின் தோல் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தமிழ்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்க சந்தையை நம்பியே சுமார் 60% விற்பனையை மேற்கொள்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த திடீர் வரி உயர்வால், தமிழ்நாட்டில் உள்ள தோல் துறை சார்ந்த சுமார் 75,000 வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி குறித்து கே.ஹெச். ஷூஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல் வஹாப் கூறுகையில், "இந்த வரி உயர்வு இத்துறையை கடுமையாக பாதிக்கும். அமெரிக்கர்கள் 20% வரை தள்ளுபடியை எதிர்பார்க்கிறார்கள். ஏற்றுமதியாளர்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். இது சாத்தியமில்லை. நாங்கள் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த வரிப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை அமெரிக்க நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன. எனவே உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே சமயம், இத்தொழிலுக்கு அரசு உதவ வேண்டும். குறிப்பாக, வரிச் செலவுகளை ஈடுகட்ட 'ஃபோகஸ் மார்க்கெட் இன்சென்டிவ் ஸ்கீம்ஸ் 'தேவை" என வலியுறுத்தியுள்ளார்.
'ஃபோகஸ் மார்க்கெட் இன்சென்டிவ் ஸ்கீம்ஸ்' என்பது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகும். இதைத்தான் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்றுமதியாளர்கள் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு, தொழிலாளர்களுக்கு மறுபயிற்சிக்காக ₹10,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதே அக்கோரிக்கை.
ஃபரிதா பிரைம் டானரி நிறுவனத்தின் இயக்குநர் இஸ்ரார் அகமது கூறுகையில், "அமெரிக்க சப்ளையர்களை இழக்காமல் இருக்க, நிறுவனங்கள் தள்ளுபடி விலைக்கு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இப்படி செய்வதன் மூலம் எங்களுக்கு கொஞ்சம் காலம் அவகாசம் அளிக்கிறது. ஆனால் அமெரிக்கா எப்போதும் வளர்ச்சி தரும் சந்தையாகவே இருந்தது. இந்த வரிகள் தொடர்ந்தால், இந்தியா நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படும்" என்று கவலை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications