தழும்பே இல்லை; 3டி முறையில் மண்டை ஓடு மாற்றம்! - முதல்வர் ஸ்டாலின் காப்பீட்டில் முதல் சாதனை
சென்னை: சத்தம் இல்லாமல் சாதனைகளைச் செய்துவருகிறது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. கடந்த மார்ச் மாதம்தான் 35 லட்சம் ரூபாய் அளவு செலவாகக் கூடிய முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
அந்த வியப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இப்போது தலையில் தழும்புகளின்றி செய்யக் கூடிய 3டி அறுவை சிகிச்சையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தச் சிகிச்சையால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வந்த மூன்று பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் சாதனை மேல் சாதனை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய அளவில் தனித்துவமான சில திட்டங்களைச் செயல்படுத்தியது. அதில் ஒரு திட்டம்தான் 'இன்னுயிர் காக்கும் திட்டம்'.
இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் விபத்தில் சிக்கிய, ஏறக்குறை 1லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிர் மீண்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 'நம்மைக் காக்கும் 48' என்ற ஒரு திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டம் சாலைகளில் ஏற்படும் திடீர் விபத்துகளில் சிக்கி, உயிருக்குப் போராடுகின்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஒருவர் விபத்தில் சிக்கிய பின் அவரை மீண்டு உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என்றால், முதல் 48 மணிநேரத்தில் முறையான சிகிச்சையை அவருக்கு அளிக்க வேண்டும். மருத்துவரீதியாகச் சொன்னால் இதுவே அவருக்கு 'கோல்டன் டைம்'.
அந்த நேரத்தில் அரசு மருத்துவமனை அல்லாது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தாலும், அவருக்கு அளிக்கப்படும் 48 மணிநேர சிகிச்சைக்காகச் செலவை அரசே ஏற்கிறது.

இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள எவரும் தமிழ்நாட்டில் எந்த மூலையில் விபத்தில் சிக்கினாலும் பலன் பெற முடியும்.
இந்த 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தைத் தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி, வட இந்திய ஆங்கில ஊடகங்கள் கூட பாராட்டி எழுதி இருக்கின்றன. இந்த அனைத்து சிகிச்சைகளும் 'முதல்வரின் காப்பீட்டுத் திட்ட'த்தின் கீழாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லீரல் டு மண்டை ஓடு மாற்று அறுவைசிகிச்சை: கடந்த மாதம் முதன்முறையாக ஈரோட்டைச் சேர்ந்த மணி என்ற நோயாளிக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்தத் துறையை உருவாக்கி 50 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு மருத்துவர்கள், முதன்முறையாகக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.
இதன் மூலம் பலரது பாராட்டுக்களை மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றனர். சமூக வலைத்தளங்களில் அதற்காகப் பலரும் லைக்குகளை அள்ளிப் போட்டு வாழ்த்தி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இப்போது அடுத்த சாதனையைச் செய்துள்ளது ராஜீவ்காந்தி மருத்துவமனை.
சென்னையைச் சேர்ந்த செல்வ மணி, ரவி, கிஷோர் குமார் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி தலையில் அடிப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இவர்களின் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அதன் விளைவாக மூளையில் அழுத்தம் அதிகரித்திருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த 3 பேருக்கும் 3டி தொழில்நுட்பத்தின் உதவியோடு நரம்பியல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்த அறுவை சிகிச்சையின் முதற்கட்டமாக, இந்த மூன்று பேரின் தலையிலும் உள்ள ஒரு பக்க மண்டை ஓட்டை அகற்றி, அதன் மூலம் ரத்தக் கசிவைத் தடுத்தனர். அதனால் இந்த மூவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் அடுத்த கட்டமாக, அகற்றப்பட்ட மண்டை ஓட்டிற்குப் பதிலாகச் செயற்கையான வடிவமைக்கப்பட்ட 3டி தொழில்நுட்ப மண்டை ஓட்டை வைத்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலினால் உயிர்பெற்றேன்: இதற்காக 3டி தொழில்நுட்பத்தில், இந்த மூவரின் மண்டை ஓட்டையும் மாதிரி வடிவத்தை மருத்துவர்கள் உருவாக்கினர். இந்த 3டி நுட்பம் மூலம் அகற்றப்பட்ட மண்டை ஓட்டின் அளவு மிகத் துல்லியமாக்கக் கணக்கிடப்பட்டது.
அதன் பின் டைட்டானியம் மூலம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட மண்டை ஓட்டை உருவாக்கினர். அதனைக் கனகச்சிதமாக்க அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் மண்டையில் பொருத்தினர். இப்போது அந்த மூன்று நோயாளிகளும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நரம்பியல் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் கோடீஸ்வரன் , "தலையில் காயம் ஏற்பட்டதால், ஏற்கெனவே மண்டை ஓடு அகற்றப்பட்ட நோயாளிகளுக்கு ரேடியாலஜி மூலமாக ஸ்கேகன் எடுத்து, அதில் கிடைத்த துல்லியமான அளவைக் கொண்டு அவர்களின் உடைந்த மண்டை ஓட்டின் மாதிரியைத் தயாரித்தோம்.

இந்த செயற்கை மண்டை ஓடு டைட்டானியம் என்று சொல்லக் கூடிய விலை உயர்ந்த உலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை நோயாளியின் மண்டைக்குள் சரியான பகுதிக்குள் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த முறை மிகவும் பாதுகாப்பானது. மூளையில் இதனால் எந்த அழுத்தமும் ஏற்படாது. நோயாளி வழக்கம் போல் தன் பணிகளைச் செய்ய முடியும்" என்கிறார்
இந்த அறுவை சிகிச்சை குறித்து நோயாளி செல்வ மணி, "3டி டிஜிட்டல் மூலமாக எனக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் முன்பு எப்படி இருந்தேனோ அதே நிலைக்கு நான் திரும்பி உள்ளேன். எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. மிக இயல்பாக இருக்கிறேன்" என்கிறார்.
மீண்டும் தன்னை உயிர் பிழைக்க வைத்ததற்காக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறார். அதுவும் பைசா செலவில்லாமல் இந்த சிகிச்சையை அரசு செய்துள்ளது. அதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்குத்தான் காலம் முழுக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்கிறார் செல்வ மணி.
29 வயதே நிரம்பிய செல்வ மணி, இன்றைக்கு முதல்வரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தால் மீண்டும் புதிய உயிர் பெற்று இந்த உலகத்தை ரசிக்கத் தொடங்கி இருக்கிறார்.
இந்த சிகிச்சையின் பெரிய வெற்றி என்னவென்றால், செல்வமணியின் தலையில் துளிகூட தழும்புகள் இல்லை. எங்கும் வடுக்கள் தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்து டைட்டானியம் மண்டை ஓடு வைக்கப்பட்ட இடத்தில் கூட இயற்கையாகத் தலைமுடி வளர்ந்துள்ளது. ஆகவே, அவர் பழைய மாதிரியே இப்போதும் தோற்றத்தில் தெரிகிறார்.

ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை: இன்றைக்கு இந்த 3 பேருக்கும் அரசு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டு இருந்தால், சுமார் தலா 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகி இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நாராயணசாமி, "இந்த அறுவை சிகிச்சையை முதன்முதலாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைத்துள்ளோம். இந்த சிகிச்சை முற்றிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஒரு ரூபாய் செலவில்லாமல் நோயாளி இன்றைக்கு உயிர் பிழைத்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்" என்கிறார்
வெளிநாடுகளில் இதைப்போன்ற 3டி சிகிச்சை என்பது நடந்துவருகிறது. ஆனால், அரசு மருத்துவமனையில் இதுவரை இப்படி ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றதே இல்லை. முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த சாதனை நடந்துள்ளதால், ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தியாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications