தமிழக வேளாண் பட்ஜெட்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி பாராட்டு! கூடவே ஒரு கோரிக்கை!
தமிழக வேளாண் பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து முதலமைச்சரை பாராட்டியுள்ள நடிகர் கார்த்தி.
சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டை முழுமையாக படித்து பார்த்த நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தயாரித்த வேளாண் பட்ஜெட் உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக நடிகர் கார்த்தி விடுத்துள்ள பதிவு வருமாறு;

நடிகர் கார்த்தி பாராட்டு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண்பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக நுணுக்கமாக
அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு. நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

என்னென்ன சிரமங்கள்?
அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு, தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது.

புதிய கோரிக்கை
இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக்கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்.












Click it and Unblock the Notifications