பாஜக டூ அதிமுக.. ஓபிஎஸ் டூ எடப்பாடி அணி! மீண்டும் யூடர்னில் பாஜகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பதவி
சென்னை: அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி கே ஆர் வாசுதேவன்- மங்கா வாசுதேவனுக்கு மகனாக பிறந்தவர் மைத்ரேயன். இவர் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ புற்றுநோயியல் படித்துள்ளார். அது போல் புற்றுநோய் தொடர்பாக கேன்சர் இன்ஸ்டிடியூட்டிலும் அவர் படித்துள்ளார்.

இவர் புற்றுநோய் குறித்து நிறைய ஜெர்னல்களை எழுதியுள்ளார். ஆரம்பத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த மைத்ரேயனுக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1995 முதல் 1997ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அது போல் 1997ஆம் ஆண்டு முதல் 1999 ஆம்ஆண்டு வரை துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2000 ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளார் மைத்ரேயன். இதைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி அவர் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது கூட ஓபிஎஸ் பக்கம் இருந்தார். பின்னர் இரு அணிகளும் இணைந்த போது கூட அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருக்கவில்லை என்பதையே மைத்ரேயன் சூசகமாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ஓபிஎஸ்ஸுடன் இருந்த நிலையில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்த போது முதல் நாள் வரை ஓபிஎஸ்ஸுடன் இருந்து விட்டு திடீரென அடுத்த நாள் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அந்த அணிக்கு தாவினார். ஜூலை 11 ,2022 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போதும் அவர் எடப்பாடி பக்கம் இருந்தார். இந்த நிலையில் திடீரென எடப்பாடி பக்கம் இருந்து ஓபிஎஸ் பக்கம் தாவினார்.
இப்படி அங்கும் இங்கும் மாறி மாறி ஓடி கொண்டிருந்த மைத்ரேயன் , கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் அவர் தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications