மீண்டும் அதிமுகவில் இணைந்த வடவள்ளி சந்திரசேகர்.. எஸ்பி வேலுமணி ரைட் ஹேண்டுக்கு கோவையில் சீட்?
சென்னை: அதிமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் வடவள்ளி சந்திரசேகர். முன்பு அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணை செயலாளராக பொறுப்பு வகித்தார். அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பராகவும் வலதுகரமாகவும் திகழ்ந்தார். அந்த சமயத்தில் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார் சந்திரசேகர். கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு கோவை வடக்கு தொகுதி வழங்கப்பட்டது. இதனால் சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி சர்மிளா சந்திரசேகரை போட்டியிட வைத்து மேயர் ஆக்க விரும்பினார் சந்திரசேகர். இதற்காக அவரை உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக்கிய நிலையில் அவர் வெற்றி பெற்றார். ஆனால், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால் மேயர் கனவு தகர்ந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலிலும் சந்திரசேகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தபோது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் சுமார் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. முக்கிய ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.
அந்த ரெய்டு சம்பவத்துக்கு பின் அதிமுக நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார் சந்திரசேகர். இதனிடையே கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, வடவள்ளி சந்திரசேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். இது கோவை மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் வடவள்ளி சந்திரசேகர். வரும் சட்டசபை தேர்தலில் வடவள்ளி சந்திரசேகருக்கு அதிமுகவில் சீட் வழங்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.












Click it and Unblock the Notifications