"தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" திடீரென பாடலை பாட தொடங்கிய சேகர்பாபு.. அப்படியே தொடர்ந்த வடிவேலு!
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று பாடலை தொடங்க, அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு பாடலை பாடி முடித்தார். இதனால் அந்த விழாவில் திமுக தொண்டர்களிடையே கலகலப்பு ஏற்பட்டது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் விழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளிலும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக அமைச்சர் சேகர்புபாபு தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.

இதில் ஆ.ராசா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். இதில் நடிகர் வடிவேலு பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இறங்கி மக்களுக்கு பணிகளை செய்ய வந்த பின், அவரின் உருவம், பேச்சு உள்ளிட்ட எதற்கும், சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.
சினிமாவின் பாணியை அவரது முகத்தில் பார்க்கவே முடியவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே மழை பெய்ய தொடங்கிய நிலையில், தொண்டர்கள் அங்கிருந்து நகராமல் இருந்தனர். விழாவும் தொடர்ந்து நடக்க, அது கொஞ்சம் விரைவாக முடிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் சேகர்பாபு, "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ" என்று வரியை பாடிவிட்டு வடிவேலுவிடம் மைக்கை நீட்டினார்.
இதையடுத்து வடிவேலு, உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ.. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ.. சிந்தனை செயலும் ஒன்றுபட்டாலே, மாற்றம் காண்பதுண்டோ.. என்று பாடி முடித்தார். அதேபோல் வடிவேலு பேசிய போதும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடலை பாடினார். இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications