ரிலீஸ் ஆயாச்சே! இன்னும் எதுக்குப்பா தாடி.. பாசமாக கேட்ட வைகோ.. துரையுடன் சேர்ந்து கலகலத்த பேரறிவாளன்
சென்னை: இன்னும் ஏன் தாடி வச்சிருக்கீங்க என பேரறிவாளனிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டதற்கு துரை வைகோவுடன் சேர்ந்து பேரறிவாளன் அளித்த பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டு நேற்றைய தினமே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தனது விடுதலைக்கு காரணமானவர்கள், தனக்கு ஆதரவாக இருந்த அரசியல் கட்சியினரை பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
ஈழத் தமிழர் பிரச்சனை- அடுத்த அதிரடியை காட்டும் முதல்வர் ஸ்டாலின்! பிரஸ் மீட்டில் ஓபனாக சொன்ன வைகோ!
முதல்வர், முன்னாள் முதல்வர்களுடன் சந்திப்பு
அந்த வகையில் நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்தனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்கு பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
வைகோ பேட்டி
அப்போது வைகோ கூறுகையில் எமனில் வாயிலில் இருந்து தனது மகன் பேரறிவாளனை தாய் அற்புதம்மாள் மீட்டெடுத்தார். வேறு யாராவது இருந்திருந்தால் சோர்ந்து போயிருப்பர், ஆனால் அற்புதம்மாள் இடைவிடாமல் போராடினார் என்றார். இதையடுத்து பேரறிவாளன் செய்தியாளர்களை சந்தித்தார்.
விடுதலைக்கு முழு காரணம்
அப்போது அவர் கூறுகையில் இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க வைகோதான் காரணமாக இருந்தார். அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றே இங்கே வர நினைத்தோம். ஆனால் நேரம் ஆகிவிட்டது. சிறை கைதிகளை சிறைக்கு சென்று பார்க்காத வழக்கத்தை உடைய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை வாதாட செய்தவர் வைகோ. வழக்கறிஞர் எங்களை வேலூர் சிறையில் வந்து சந்தித்தார்.
ஜெத்மலானிக்கு நன்றி
ஜெத்மலானி உயிரோடு இல்லை என்றாலும் அவர் செய்த உதவியை நாங்கள் மறக்க முடியாது என்றார். பின்னர் பேரறிவாளன், வைகோ, துரை வைகோ ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வைகோ, பேரறிவாளனிடம், விடுதலை ஆகிட்டீங்களே பிறகு இன்னும் எதற்காக தாடி வைத்திருக்கிறார்கள் என கேட்டார்.
தாடி ஏன் ?
அதற்கு பேரறிவாளனும் துரை வைகோவும் "தற்போது இதுதான் இளைஞர்கள் மத்தியில் டிரென்டாகி வருவதாக" பதில் அளித்தனர். இதனால் அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்த சந்திப்பின் போது வேலூர் சிறையில் பொடா சட்டத்தில் வைகோ கைதாகி வந்த போது அவர் எங்களுடன் வாலிபால் விளையாடியதை மறக்க முடியாது என பழைய நினைவுகளை பேரறிவாளன் துரை வைகோவிடம் பகிர்ந்து கொண்டார்.