அலங்கார ஊர்திகளுக்கு மறுப்பு- கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு- தான்தோன்றித்தனம்...வைகோ கடும் கண்டனம்
சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவதை மறுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் நடைபெறுகின்ற குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான தமிழக அரசு ஊர்தியில் பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது. அந்த ஊர்திக்கு, அணிவகுப்பில் இடம் தர முடியாது என ஒன்றிய அரசு மறுத்து இருப்பது, ஏழரைக் கோடித் தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் ஆகும்.
3 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..'இது சிவபெருமானின் அவதாரம்'..வரிசையாக நின்று வழிபடும் மக்கள்
கேரளம், மேற்குவங்கம், ஆந்திர அரசுகளின் ஊர்திகளுக்கும் இடம் தரவில்லை. இது தான்தோன்றித்தனமான போக்காகும். கூட்டு ஆட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் ஆகும். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்புகள், இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையிலேயே அமைந்து இருக்கின்றது.
திரிக்கப்படும் வரலாறு
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறைத் திரித்து எழுதுகின்றார்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றார்கள். காந்தி, நேரு மற்றும் முன்னணித் தலைவர்களின் பங்களிப்பை மறைத்து, காவித் தலைவர்களை முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். மறைக்கப்பட்ட வீரர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்று கூறி, கட்டுக்கதைகள், கற்பனைகள், பொய்யான புனைந்துரைகளை வரலாறாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். போலிகளை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
விடுதலைப் போரில் தமிழகம்
பாரதி ஒரு தேசிய கவி என அறிவித்து, நாடாளுமன்றத்தில் பாரதிக்குச் சிலை அமைத்து, தலைநகர் தில்லியில் சாலைக்குப் பெயர் சூட்டி, ஏற்கனவே ஒன்றிய அரசு பெருமைப்படுத்தி இருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடியும், எத்தனையோ முறை புகழ் ஆரம் சூட்டி இருக்கின்றார். பாரதி, வ.உ.சி., வீரத்தாய் வேலு நாச்சியாரின் தியாகம், வட இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பிற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போரில், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது.
சாதனைகளா? புகழாரங்களா?
இந்தியாவுக்கு வெளியே, உலக அரங்கில் நடைபெறுகின்ற கண்காட்சிகளிலும் இத்தகைய வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வருகின்றார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் நடைபெறுகின்ற தொழில் வணிக கண்காட்சி எக்ஸ்போ, தற்போது துபாயில் நடைபெற்று வருகின்றது. 200 நாடுகள் பிரமாண்டமான அரங்குகளை அமைத்து உள்ளன. பிற நாடுகளின் அரங்குகளில், அந்த நாடுகளின் தலைவர்கள் படங்கள் கிடையாது; நாடுகளின் சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் இந்திய அரங்கில், சர்தார் வல்லபாய் படேல் சிலை, இராமர் கோவில், பிரதமர் நரேந்திர மோடி அரசைப் புகழ்கின்ற காணொளிகளையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள்.
மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை
கடந்த 3 ஆம் தேதி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என ட்வீட் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.