மதிமுகவுக்கு சாதகமான 12 தொகுதிகள்.. சர்வே மூலமாக அடையாளம் கண்ட துரை வைகோ.. திமுகவுக்கு செக்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே மதிமுக எம்பி துரை வைகோ தரப்பில் அக்கட்சிக்கு சாதகமான 12 தொகுதிகளை சர்வே மூலமாக அடையாளம் கண்டுள்ளார். இதனை வைத்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த வைகோ தலைமையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகள் அத்தனையும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதேபோல் கடந்த தேர்தலை காட்டிலும் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே கூறிவிட்டன.

அதிலும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தங்கள் கட்சி கட்டாயம் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதனால் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறார். அதேபோல் வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை திமுகவிடம் எதிர்பார்த்தனர். ஆனால் அதனை திமுக தலைமை கமல்ஹாசனுக்கு வழங்கியது.
இதனால் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டால், திமுகவிடம் வைகோவுக்கு ராஜ்ய சபா எம்பி பதவியை கேட்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே துரை வைகோ தரப்பில் தனியாக ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் மதிமுகவுக்கு சாதகமான சில தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறார்.
அதன்படி வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசன், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 தொகுதிகளை துரை வைகோ அடையாளம் கண்டுள்ளார். இதில் மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய தொகுதிகளில் கடந்த முறையும் மதிமுக போட்டியிட்டது.
இம்முறை திருச்சி எம்பியாக துரை வைகோ வென்றிருப்பதால், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு தொகுதியை கைப்பற்ற மதிமுக தீவிரமாக உள்ளது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதியில் புதூர் பூமிநாதன் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால், திமுக தரப்பு தொகுதி எண்ணிக்கையை குறைக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications