காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!
மயிலாடுதுறை: சென்னை ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் அர்லேகர் மரியாதை செலுத்திய நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநர் செய்தது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட இடதுசாரி இயக்க முன்னோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினருமான இரெ.இடும்பையன்(79) மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் கிராமத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாலை அணிவித்து, கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவர் இடும்பையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேட்டியளித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வைகோவிடம், சென்னை ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்துள்ளதைப் போன்ற பேனர் வைக்கப்பட்டு, அப்படத்துக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மரியாதை செலுத்திய நிகழ்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர்" திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்த ஆளுநர் அர்லேக்கர் செய்தது படு அயோக்கியத்தனம். என்ன திமிரும், அகம்பாவமும் இருந்தால் தமிழ்நாட்டில் வந்து ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்து கிள்ளுக்கீரையாக தமிழ்நாட்டை நினைத்துவிட்டாரா ஆளுநர்?. அவர் செய்தது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்" என கருத்து தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை (மே 30) 'வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்' என்ற பெயரில் திருவள்ளுவரைச் சிறப்பித்து விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் இருந்தது விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications