நாடாளுமன்றத்தில் வெடிக்கப்போகும் அதானி விவகாரம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் பாயிண்டை பிடித்த வைகோ!
சென்னை: ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் இந்திய எரிசக்தி நிறுவனம் மீதான புரூக்ளினில் உள்ள நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியமான பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், திமுக சார்பில் திருச்சி சிவா, மதிமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி இதில் பங்கேற்று உரையாற்றினார். வைகோ பேசுகையில், “இந்தியாவில் மின் கொள்முதல் ஒப்பந்தம் பெற அதிகாரிகளுக்கு ரூ.2200 கோடி கொடுத்ததாக அதானி குழுமம் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்த லஞ்ச வழக்கில் அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கவுதம் அதானி மற்றும் அவரது மருமகனும், அதானி கிரீன் நிர்வாக இயக்குநருமான சாகர் அதானி ஆகியோருக்கு இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.
“இந்த சம்மன் அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள் சிவில் நடைமுறைகளின் கூட்டாட்சி விதிகள் 12ன் கீழ் நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், “பதிலளிக்கத் தவறினால், புகாரின் மீதான தீர்ப்பு ஆதானி குழுமத்திற்கு எதிராக அமையும்” என்றும், லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதானி குழுமத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை இந்த சம்மன் தொடங்குகிறது” என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசுக்குச் சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உற்பத்திக்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, ஆந்திர பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் சில மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்கள் (ரூ. 2,200 கோடி) லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் இந்திய எரிசக்தி நிறுவனம் மீதான புரூக்ளினில் உள்ள நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியமான பிரச்சனையை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சர் இதுகுறித்து விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது. மணிப்பூர் வன்முறை பிரச்சனை, வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications