தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் The Family Man 2 தொடரை தடை செய்ய வைகோ வலியுறுத்தல்
சென்னை: தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் The Family Man 2 இந்தி தொடரை தடை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரான ராஜ்யசபா எம்.பி. வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ அனுப்பியுள்ள கடிதம்:
The Family Man 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.
தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக்காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது.
எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.