அரசின் வருமானத்துக்காக மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா.. வைரமுத்து காட்டம்
டாஸ்மாக்கை நடத்தி வரும் தமிழக அரசை வைரமுத்து விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அரசின் வருமானத்துக்காக மக்கள் எல்லாரும் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என்று கவிஞர் வைரமுத்து காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் பாடலாசிரியர்களிலேயே, சமூக அவலங்களுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்து கொண்டிருப்பதில் முதன்மையானவரும், முக்கியமானவரும் கவிஞர் வைரமுத்துதான்.
சமூகத்துக்கு எதிரான சம்பவங்களை பேட்டிகள் மூலமாகவும், கவிதை வடிவிலும் அதனை வெளிப்படுத்த தயங்காதவர் வைரமுத்து.

வைரமுத்து கருத்து
அந்த வகையில், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், வைரமுத்துவும் தன் கருத்தினை தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தோல்வி
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய போது, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது என்றும் உயர்சாதியினருக்கான இந்த இடஒதுக்கீடு, சமூக நீதிக்காக கால் நூற்றாண்டுவரை போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி என்றும் வைரமுத்து தெரிவித்தார்.

மயங்க வேண்டுமா?
கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட முக்கிய காரணமே மதுதான் என்று கூறிய வைரமுத்து, தமிழக அரசின் வருமானத்திற்காக 20 சதவீதம் மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

கொள்கை முடிவு
தற்போது ஆட்சியில் உள்ள அரசும் சரி, இதற்கு பின் வரப்போகின்ற அரசும் சரி மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவர் எனக்கூறினார்.












Click it and Unblock the Notifications