சென்னை புத்தக கண்காட்சிக்கு நாளை மாலை வருகை தருகிறார் கவிஞர் வைரமுத்து!
சென்னை: சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிக்கு கவிஞர் வைரமுத்து நாளை மாலை 4 மணிக்கு வருகை தருகிறார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 45 ஆவது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இது கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 6ஆம் தேதி புத்தகக் கண்காட்சி முடிவடைகிறது. பொதுவாக ஜனவரி மாதம் இந்த புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் தாமதமாக தொடங்கியுள்ளது. கவிப் பேரரசு வைரமுத்துவின் இலக்கியத்திற்கு இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான வைகறை மேகங்கள் 1972 இல் வெளி வந்தது.
இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சிணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. வைரமுத்து இலக்கியம் 50 ஐ வாசகர்களோடு கொண்டாடுவதற்காக கவிஞர் வைரமுத்து நாளை மாலை 4 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருகிறார். வாசகர்கள் வாங்கும் தம் படைப்புகளில் கையொப்பமிடுகிறார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை அமைந்துள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொல்பொருள் கண்காட்சி அரரங்கின் அருகில் திறந்தவெளியில் வைரமுத்து கையொப்பமிடும் நிகழ்ச்சிக்காகத் தனிமேடை அமைக்கப்பட்டிருக்கிறது. கையொப்பம் இட்டவுடன் புத்தகக் கண்காட்சிக்கு வாசகர்களுடன் வருகிறார்.
பபாசி தலைவர் வைரவன், செயலாளர் முருகன், பொருளாழர் குமரன் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications