ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’.. நெகிழ்ச்சியுடன் சொன்ன வைரமுத்து!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒடியா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் 12வது மொழியாக ஒடியாவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.
கவிஞர் வைரமுத்து எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'. வைகை அணை கட்டப்பட்ட போது, அங்கிருந்த காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை கவிஞர் வைரமுத்து எழுதினார்.

வைகை அணை பகுதி மக்கள், மண்ணோடும், வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் வைரமுத்து. இந்த நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஒடியா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை ஒடியா மொழியில் அஜய் குமார் பட்நாயக் மொழிபெயர்த்திருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
கள்ளிக்காட்டு இதிகாசம்
ஒடியா மொழியில்
வெளிவந்துவிட்டது
ஒரிசாவின்
அதிகார மொழியாகவும்
ஜார்கண்டின் இரண்டாம்
அதிகார மொழியாகவும்
விளங்குவது ஒடியா
13ஆம் நூற்றாண்டில்
இலக்கிய மொழியாக
அறியப்பட்ட ஒடியா
5 கோடி மக்களால் பேசப்படுவது
புதிதாக வளர்க்கப்பட்ட
உரைநடையை விடப்
பாரம்பரியமான கவிதைமொழி
கொண்டது ஒடியா
பெரும் கவிஞர் சரள தாசர்,
சச்சிதானந்த ரௌத்ரே,
குருப்பிரசாத் மொகந்தி,
சௌபாக்ய மிஸ்ரா போன்ற
மூத்த படைப்பாளிகளாலும்
பக்கீர் மோகன் சேனாபதி,
மனோஜ் தாஸ், பிரதீபாராய் போன்ற
நவீனப் படைப்பாளிகளாலும்
செழுமைப் படுத்தப்பட்ட
ஒடியா மொழியில்
கள்ளிக்காட்டு இதிகாசம்
கலப்பது குறித்துப்
பெருமிதம் அடைகிறேன்
அஜய் குமார் பட்நாயக்
மொழிபெயர்த்திருக்கிறார்
இந்திய மொழிகளில்
கள்ளிக்காட்டு இதிகாசத்தின்
பன்னிரண்டாம் மொழிபெயர்ப்பு
இது.
நன்றி: சாகித்ய அகாடமி
எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications