எடப்பாடி தலைமையை ஏற்க ஓபிஎஸ் முடிவு? நிர்வாகிகளின் அடுத்தடுத்த விலகலுக்கு என்ன காரணம்?
சென்னை: ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரகாகர் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய சூழலில், வைத்திலிங்கத்தின் விலகலுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான வைத்திலிங்கம் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே வைத்திலிங்கம் திமுக அல்லது தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமானார். அதன்பின் ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இப்படி ஒவ்வொரு முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி வந்தனர். இறுதியாக வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் சூழலில், ஓபிஎஸ் அணி கரைந்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த முடிவுக்கு பின்னணியில் ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ், அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு பயணம், மாநாடு என்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டார். ஆனால் இதுவரை எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவில்லை. அதிமுக தொண்டர் உரிமை மீட்பு இயக்கம் என்று பெயர் மாற்றிய ஓபிஎஸ், திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தார்.
புதியக் கட்சியை தொடங்குவோம் என்று வைத்திலிங்கம் உள்ளிட்டோர் முழக்கமிட்ட போதும், புதியக் கட்சியை தொடங்கப் போவதாக தாம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று யூடர்ன் போட்டார். நிர்வாகிகளிடம் ஒரு படிவம் கொடுத்து திமுக அல்லது தவெக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று கேட்டுவிட்டு, மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க முடியாது என்று வெளியே வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், மீண்டும் அவரது தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பலரும் திமுக மற்றும் தவெக என்று அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications