பாஜக தலைவர்களை பொதுவெளியில் விமர்சித்தால் நியாயம் கிடைக்குமா? காயத்ரிக்கு வானதி கேள்வி
சென்னை: தவறு என்றால் உடனடியாக சொல்லக் கூடிய தைரியமான பெண் பொதுவெளியில் தலைவர்களை விமர்சிப்பதால் நியாயம் கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும் என காயத்ரி ரகுராமுக்கு பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாஜகவில் 8 ஆண்டுகள் சில பொறுப்புகளில் கட்சிக்காக பணியாற்றியவர் காயத்ரி ரகுராம். இவர் தேர்தல் நேரத்திலும் பாஜக வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். இவர் திருச்சி சூர்யா சிவா- டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவை கண்டித்து ட்வீட் போட்டிருந்தார்.
இந்த நிலையில் காயத்ரி கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அவரை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தனர். மேலும் துபாய் ஹோட்டலில் தனது கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை 150 பேருக்கு மத்தியில் பேசியதாக காயத்ரி குற்றம்சாட்டியிருந்தார்.

அக்கா என அழைத்த அண்ணாமலை
தன்னை அக்கா அக்கா என அழைத்துவிட்டு எப்படி தன் மீது குற்றம்சாட்ட மனம் வந்தது என கேள்வி எழுப்பினார். மேலும் தன்னுடன் நேருக்கு நேர் வாதம் செய்ய தயாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராமை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது.

பாஜகவிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கி என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி என காயத்ரி ரகுராம் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் ஒரு தலைவருக்கு இசட் வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்யும் முடிவு
ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரை கெடுத்ததற்கும் என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கும் என்னை மானப்பங்கம் செய்தததற்கும் நன்றி. எனது 8 ஆண்டு சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி. எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி என காயத்ரி ரகுராம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவும் பாஜக மகளிரணியின் தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் காயத்ரி ரகுராமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக் கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக் கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி, ஆனால் கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

கட்சிக்குள் இருக்கும் அமைப்பு
உங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளுக்கு கட்சிக்குள் இருக்கக் கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதைவிட்டுவிட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சினையை வெளியே கொண்டு வரலாமே தவிர நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

தைரியம்
பிரச்சினைகளை எப்படி லாவகமாக தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் இது போன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும் சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட விட்டுவிட்டு வெளியே செல்லக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications