தமிழக அரசு நிர்வாகத்தின் தோல்வி இது.. கள்ளச்சாராயம் பலி குறித்து கண்டனம் முழங்கிய வானதி சீனிவாசன்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் பலியான நிலையில், மேலும் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், இது அரசு நிர்வாகத்தின் தோல்வி என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்திருக்கின்றனர்.
ஆனால், இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 5-8 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்படு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று சட்டமன்ற கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த வானதி சீனிவாசன், கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்று விமர்சித்துள்ளார்.
"கள்ளச்சாராய பலி என்பது முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தின் தோல்விதான். மட்டுமல்லாது இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல. குறைந்த காலகட்டத்தில் இதுபோன்று இரண்டாவது சம்பவம் தமிழகத்தில் நடக்கிறது. பாஜக இது குறித்து தனது கவலையை எழுப்பியிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்தினாலும் இப்படியான சோகங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக ஆர்ப்பாடத்தை அறிவித்திருக்கிறது. மாநில அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சி தலைமை அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications