ஸ்டாலின் பேச்சை திமுகவினரே சீரியஸாக எடுப்பதில்லை! சொல்வது ஒன்று -செய்வது ஒன்று! -வானதி சீனிவாசன்
சென்னை: 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பொய்யை பரப்பி வருகிறார் என்றும் ஆனால் அவற்றையெல்லாம் அவரது கட்சியினரே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை எனவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை 'சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று' என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக வைத்திருக்கிறார் என வானதி சாடியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் நேற்றைய போட்காஸ்ட் பேச்சுக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ள விவரம் வருமாறு;

இந்தியாவுக்காக பேசுகிறேன்: ''ஊழல், வாரிசு அரசியலில் மூழ்கி திளைக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில் உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். ஆனால், அவற்றையெல்லாம் அவரது கட்சியினரே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை.''
சொல்வது ஒன்று -செய்வது வேறொன்று: ''குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கழித்து, 50 சதவீதத்திற்கும் குறைவான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கியுள்ளது. 'சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று' என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாகவே வைத்திருக்கும் ஸ்டாலின், பிரதமர் சொன்ன ரூ. 15 லட்சம் என்ன ஆச்சு என்று, கொஞ்சமும் கூச்சமில்லாமல் திரும்ப திரும்ப பொய்யை பரப்பி வருகிறார்.''
நரேந்திர மோடி: ''வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றுதான், 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே பிரதமர் மோடி அப்படி பேசினார்.''
அவதூறு பரப்பினார்கள்: ''கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான், பிரதமர் மோடி ரூ. 5 லட்சம் தருவதாக சொன்னாரே என்ன ஆச்சு என்று திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருநாள் விடாமல் அவதூறு பரப்பிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், 2014 தேர்தலைவிட, 2019ல் 20 எம்பிக்களை பாஜகவுக்கு அதிகம் தந்தனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அதுதான் நடக்கப் போகிறது. ''
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடு: ''கடந்த ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளால்தான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் மாறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் உலகமே கணித்துள்ளது. மோடி ஆட்சியில்தான் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர், கழிவறை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு, வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சாதத்தியமாகி இருக்கின்றன.''
''உண்மை இவ்வாறிக்க திரும்ப திரும்ப மோடி ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். ஆனால், மக்கள் உண்மையை அறிவார்கள். அதனால்தான் மோடியை மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்கிறார்கள்.''












Click it and Unblock the Notifications