தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே!
சென்னை: தமிழகத்தில் சிறந்த அமைச்சர்கள் யார், சிறந்த எம்எல்ஏக்கள் யார் என கேட்ட கேள்விக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறும் உறுதியுடன் களப்பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; மாநிலத் தலைமையின் வேட்பாளர் பட்டியலை மத்திய தேர்தல் குழு வெளியிடும்.

கூட்டணிகளில் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சாதக பாதகங்கள் இருக்கலாம். ஆனால், ஒதுக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் திட்டமிட்டு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என டெல்லி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் நிச்சயம் சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.
2019 இல் கட்சி தொடங்கி வேட்பாளர்களை நிறுத்தியபோது, மக்களும் தொண்டர்களும் உழைத்தனர். ஆயினும், அவர் சுயநலத்திற்காக ராஜ்ய சபா எம்.பி. ஆகிவிட்டு, அனைவரையும் கைவிட்டுவிட்டார்.
கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களைப் பாராட்டிய அவர், கமல்ஹாசனுக்கு சரியான பதிலைத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார். "தொண்டர்களுக்கு விசுவாசமாக இல்லாத ஒருவர், அரசியலில் எவ்வாறு வெற்றிபெறுவார் என்பதற்கு அவரது கட்சி ஒரு சாட்சி" என வானதி சீனிவாசன் கூறினார்.
ஆகவே, புதிய கட்சிகள் தொடங்கும் தலைவர்கள் மக்கள் நலனுக்காக உழைப்பார்களா, கொள்கை அரசியலில் சமரசம் செய்யாமல் பயணிப்பார்களா என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். இதற்கு கமல்ஹாசனின் கட்சியே சிறந்த எடுத்துக்காட்டு என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
மேலும் வானதியிடம் "சிறந்த அமைச்சர்கள் யார்" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்கம் தென்னரசு, துரைமுருகன் ஆகியோரின் பெயர்களை அவர் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பாஜகவை கிண்டல் செய்தாலும் தென்னரசு கண்ணியமாக பதிலளிப்பார் என்றும் துரைமுருகன் இருந்தால் அந்த சபையே கலகலப்பாக இருக்கும் என்றார்.
அது போல் சிறந்த எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வி எழுந்ததற்கு வானதி, கே.பி.முனுசாமி, ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் சிறந்தவர்கள் என தெரிவித்துள்ளார். அது போல் புதுவையில் வானதி பிரச்சாரம் செய்த போது கூறியிருப்பதாவது: கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.
வருகிற தேர்தலில் அண்ணாமலை போட்டி தொடர்பாக கட்சி தலைமை செல்லும். அதிமுக தோல்வியடையும் தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவதாக சமூகவலைதளங்களில் பரப்பி, எங்கள் தொண்டர்களின் மனஉறுதியை குலைக்க திமுக சதி செய்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கத்தில் எங்கள் எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் நுழைவார்கள்.
5 மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் சரத்குமாருக்கு தேசிய பொறுப்பு அளிக்கப்படும். இதுகுறித்து அவரிடம் கூறியுள்ளோம். அவரது ஆதங்கத்தை தலைவரிடம் கூறியுள்ளார். தலைவர்கள் அதனை கட்டாயம் கவனிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications