வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு இன்று காலை காத்திருந்த அதிர்ச்சி.. கிளம்பவே 3 மணி நேரம் தாமதம்!
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் மூன்று மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் தாமதமாக கிளம்பியதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அவசர வேலையாகச் செல்பவர்கள் இந்த தாமதத்தால் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினர்.

வந்தே பாரத் ரயில்
நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த வந்தே பாரத் ரயில்கள் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் இயக்கப்படுகிறது.
சென்னை - நாகர்கோவில்
சென்னை - நாகர்கோவில் இடையிலான 'வந்தே பாரத்' ரயிலில் வரும் மே 8 ஆம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. ஏற்கனவே 16 பெட்டிகளுடன் இயங்கி வரும் நிலையில், கோடை விடுமுறையால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க 20 பெட்டிகளாக அதிகரிக்கிறது தெற்கு ரயில்வே. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே நாளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். வழக்கமாக, சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்ல பெரும்பாலான விரைவு ரயில்கள் சுமார் 11 முதல் 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் வந்தே பாரத் ரயில் 8.50 மணி நேரத்தில் சென்றடைகிறது.
இன்று 3 மணி நேரம் தாமதம்
இந்த வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஆகிய வழித்தடங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் ஏசி சேர் காரில் 1,760 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 3,240 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட இருந்தது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறால் குறித்த நேரத்தில் ரயில் கிளம்பவில்லை.
லேட்டாக சென்றடையும்
பின்னர், காலை 8 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. 3 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இன்று மாலை 4.50 மணியளவில் இந்த ரயில் நாகர்கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications