வன்னியர்10.5% உள் ஒதுக்கீடு... அரசியல் சட்டத்தை மீறவில்லை....உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25 க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற வகுப்பினருக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். மேலும் இது அரசியல் ஆதாயத்துக்காக தேர்தலை கணக்கில. வைத்து இயற்றப்பட்ட சட்டமாகும், எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது

அதேவேளையில், தமிழக அரசுத்தரப்பில் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, இதில் அரசியல் காரணிகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரரான பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் தரப்பு, வன்னியர்களுக்கான தனி உள்இடஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை, இது வன்னியர்களுக்கு மட்டுமான உள்ஒதுக்கீடு இல்லை, மாறாக வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினருக்குமானது எனவே சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வாதங்களை ஏற்காத சென்னை உயர்நீதிமன்றம், மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் உள் இடஒதுக்கீட்டை வழங்கலாமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனவே, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என பாமக நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "மாநில அரசு புதிதாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை, நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை. ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல அதில் 7 பிரிவினருக்கானது, ஏற்கனவே இதே போல பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீட்டும் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் தான் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
எனவே இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுப்பதோடு, எதிர் மனுதாரரிடம் கருத்தை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் (Ex-party Order), அதற்கான உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" என தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்த வழக்கில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications