”இடஒதுக்கீடு” தமிழ்நாட்டின் சூழல் எனக்கு தெரியாது.. 'வாத்தி' பட இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்!
இடஒதுக்கீடு குறித்து பேசிய கருத்துக்கு வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடுவேன் என்று கருத்து பற்றி வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு குறித்த சூழல் எனக்கு தெரியாது என்றும், சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலே பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிய வாத்தி திரைப்படம் கடந்த 17ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி குறித்து பேசப்பட்டுள்ளாது.
தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும், தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்ததாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து
இதனிடையே படத்தின் ரிலீஸிற்கு முன், விளம்பரப் பணிகளுக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி பல்வேறு நேர்காணல் அளித்திருந்தார். அந்த வகையில் ஒரு நேர்காணலில் இட ஒதுக்கீடு குறித்து வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இடஒதுக்கீடு பற்றி வாத்தி இயக்குநர்
இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்த நேர்காணலில் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு இயக்குநர் வெங்கி அட்லூரி, நான் ஒருவேளை மத்திய கல்வித்துறை அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையில் வழங்காமல் பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிடுவேன் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்
இடஒதுக்கீடு தொடர்பாக எந்த புரிதலும் இல்லாமல் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியுள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் வாத்தி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களை சந்தித்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இடஒதுக்கீடு பற்றிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இடஒதுக்கீடு பற்றி தெரியாது
இயக்குநர் வெங்கு அட்லூரி கூறுகையில், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு குறித்த சூழல் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய எண்ணம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் பதில் கூறியிருந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications