அப்டி போடு.. விசிக பற்ற வைத்த நெருப்பு.. "சனாதனம் Vs ஆர்எஸ்எஸ்.. அனலடித்த மாமல்லபுரம்.. தடதடத்த பாஜக
மாமல்லபுரத்தில் விசிக, இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
சென்னை: இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் கரம் கோர்த்து, மத்திய அரசுக்கு தெரிவித்த எதிர்ப்பானது, அரசியல் களத்தை அதிர வைத்து வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக விசிகவும், இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளன.. அந்த வகையில் 4 நாட்களுத்கு முன்பு, விசிகவும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார்.
அதன்படியே, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாமல்லபுரம், திருப்போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. காலையில் மாமல்லபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமகிருஷ்ணன்
விசிக மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார்... இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய, பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.. அதேபோல மாலையில், திருப்போரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான இடதுசாரிகள் இதில் பங்கேற்றனர்.. விசிக மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

சிபிஎம் கோரிக்கை
மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 25 லிருந்து 31 வரை நாடு தழுவிய பிரச்சாரம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால், மோடி அரசு செய்த அநியாய உயர்வு அனைத்தையும் முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும்., வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலைக் கொள்கையை கைவிட வேண்டும், பொதுப் போக்குவரத்திற்கான செலவுகளை உயர்த்தக்கூடிய விலைக் கொள்கையையும் கைவிட வேண்டும், என்ற கோரிக்கையை சிபிஎம் விடுத்துள்ளது..

பாவலன் பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவின் சார்பில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் பேசியதாவது: "எது சனாதனம்? கல்வியை பறிக்க வேண்டும், அரசிலே வேலை வாய்ப்பை பறிக்க வேண்டும் என்று நினைத்தனர்.. அரசு என்ற ஒன்று இருந்தால் இவர்கள் அரசு அதிகாரியாக வந்துவிடுவார்கள் என்று நினைத்து, அரசு துறைகளை தனியார் துறைக்கு மாற்ற நினைத்தனர்.. அந்த தனியார் துறைகளில் உயர்சாதி இந்துக்கள் தனியார் துறைகளை நடத்துவார்கள், அதே இடத்தில் சாதாரண பாமர மக்கள் அங்கே தொழிலாளர்களாக இருப்பார்கள்.. இதுதான் சனாதனம்.

ஆர்எஸ்எஸ்
ஆக, அரசுத்துறையை தனியார்துறைக்கு தாரைவார்ப்பதுபோல, விவசாயத்தையும் தனியார் துறைக்கு தாரை வார்ப்பார்கள்.. விவசாய விளைபொருட்களை தனியார் துறையின் முதலாளிகளுக்கு விற்க வேண்டும்.. அந்த முதலாளி விவசாய விளைபொருட்களின் விலையை தீர்மானிப்பான்.. நாமெல்லாம் அந்த முதலாளி சொல்லும் விலையிலேயே பொருட்களை வாங்க வேண்டும். இதுதான் ஆர்எஸ்எஸ் திட்டம்.. மோடியின் திட்டம்.

இஸ்லாமியர்கள்
கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஒரு அரசாக மோடி அரசு திகழ்ந்து வருகிறது.. நாட்டிலேயே பெரும்பான்மை மக்கள் தொழிலாளர்கள், பெரும்பான்மை மக்கள் விவசாயிகள், பெரும்பான்மை மக்கள் தலித்துகள், இவர்கள் எல்லாம் இன்று ஓரணியில் ஒன்று திரண்டு விட்டால், சிறுபான்மை மக்களையும், பழங்குடி மக்களையும் நாம் அணிவகுத்துவிட்டால், கண்டிப்பாக இந்த சனாதனத்தை விரட்டி அடிக்க முடியும்.. அதற்கு ஒரு அச்சாரமாகத்தான் இன்று விசிகவும், இடதுசாரி இயக்கமும் கை கோர்த்துள்ளது.

பற்ற வைத்த நெருப்பு
இன்றைக்கு இடதுசாரி இயக்கமும், விசிகவும் பற்ற வைத்துள்ள நெருப்பு, நாடு முழுவதும் திசையெங்கும் பற்றி படர்ந்து, ஏழைகளை, உழைப்பாளிகளை, பாட்டாளிகளை, அணிதிரட்டி இந்த நாட்டிலே மிகப்பெரிய அளவில் மக்கள் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.. பண்பாடு, சமூக தளத்தை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்து களமாட வேண்டும்.. அப்போதுதான் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.. நம் சந்ததியை பாதுகாத்து கொள்ள முடியும்.. விவசாயத்தை, பெண்களை, இளைய சமுதாயத்தை பாதுகாக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications