நாளை நடக்க இருந்த விசிக கூட்டம் ரத்து.. தவெக ஆட்சியமைக்க ஆதரவு கிடைப்பதில் சிக்கல்?
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக, நாளை நடைபெறவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஏற்கனவே, 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இவர்கள் ஆதரவளித்தாலே, ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைத்துவிடும் என்னும் சூழலில், இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இந்த மூன்று கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை விசிக முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் இது குறித்த நிலைப்பாட்டை எடுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரிய விவகாரத்தில் ஆலோசிக்க நாளை நடக்க இருந்த விசிக உயர்நிலைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசிக இரண்டு சட்டமன்ற இடங்களை தன்வசம் வைத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் அக்கட்சியின் நிலைப்பாடு ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கிறது.
இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், நாளை இதுதொடர்பாக விசிக நடத்த இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications