"அந்த வார்த்தை".. இதுக்கே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் - திருமாவளவன் காட்டம்
"ஊடகங்கள் எப்போதும் தன்னை குறித்தே பேச வேண்டும் என்பதில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனமாக இருக்கிறார்"
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு பேசிய ஒரு வார்த்தையை குறிப்பிட்ட திருமாவளவன், இதற்காகவே அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்போதாவது அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன் vs அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாஜவையும், அதன் சித்தாந்தத்தையும் கடுமையாக எதிர்க்கும் கட்சியாக இருப்பது விடுதலை சிறுத்தைகள் தான். மேலும், தான் திமுக கூட்டணியில் இருந்த போதும் கூட, பாஜக உடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகவை நேரடியாக எச்சரித்து வருகிறார் திருமாவளவன். பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அதிமுகவால் ஒன்றுபட முடியாது என்றும், அதிமுகவை பலவீனப்படுத்துவதே பாஜகதான் என்றும் திருமாவளவன் அண்மையில் பேசினார். திருமாவளவனின் இந்த பேச்சு தமிழக பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. இதனால் திருமாவளவனை அண்ணாமலையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராணுவ வீரர் கொலை விவகாரம்
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை பேசியதை திருமாவளவன் சுட்டிக்காட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபாகரன் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்காக திமுகவை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது. இதுதொடர்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

"சுட்டுத்தள்ளுங்க"..
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், "உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கிக்குள்ள குண்டு இருக்கு.. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார்.. சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க.. மிச்சதை பாஜக தமிழகத்தில் பார்த்து கொள்ளும் என அண்ணாமலை பேசியுள்ளதாக அதில் பதிவாகி இருக்கிறது.

திருமாவளவன் காட்டம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊடகங்கள் எப்போதும் தன்னை குறித்தே பேச வேண்டும் என்பதில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனமாக இருக்கிறார். இதற்காக எதையாவது பரபரப்பாக பேசுவது, அரசுக்கு எதிராக அவதூறுகளை பரப்புவது, தனிநபர் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பது போன்ற யுக்திகளை அவர் கையாண்டு வருகிறார். ஏற்கனவே அவர், ராணுவ வீரர்களிடம் நீங்கள் சுட்டுத்தள்ளுங்கள்.. தமிழக பாஜக பார்த்துக் கொள்ளும் என உத்தரவிட்டாரே.. அந்த பேச்சுக்கே அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் போலீஸார் செய்யவில்லை. இப்போதாவது அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்" என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications