கூட்டணிக் கட்சிக்காரனுக்கு எங்க கொடி கசக்கும்! ஓட்டு மட்டும் இனிக்கும்! அனல் கக்கிய திருமாவளவன்!
கூட்டணிக் கட்சியினர் மீது திருமாவளவன் பகிரங்க சாடல்.
சென்னை: கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும் ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் திருமாவளவன் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு சாடியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அனல் கக்கிய திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி படுகொலையை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், மனதில் தோன்றிய ஆதங்கத்தை மறைக்காமல் கொடித்தீர்த்தார். தேர்தல் அரசியலுக்காக தாம் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும் தேர்தல் அரசியல் வேண்டாம் என்று 10 ஆண்டுகள் தேர்தலை புறக்கணித்த கட்சி விசிக எனவும் தெரிவித்தார். பாஜகவில் கிரிமினல்களை தேடி தேடிச் சேர்ப்பதாக விமர்சித்த அவர் கருத்தியல் ரீதியாக விசிகவினருடன் பாஜக நிர்வாகிகள் விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பினார்.

நான்கு பேரும்
தமிழக சட்டசபைக்கு தாம் அனுப்பியுள்ள 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் நன் முத்துக்கள் என திமுகவினர் தன்னிடம் பாராட்டுவதாகவும் அவர்கள் அவையில் பேசினால் அவர்கள் முகம் தெரியவில்லை, உங்கள் முகம் தான் தெரிகிறது, அந்தளவுக்கு உங்கள் வளர்ப்பு இருக்கிறது எனக் கூறியதாகவும் கூறினார். குற்றவாளிகளுக்கு மட்டுமே பாஜகவில் பதவி வழங்கப்படுவதாகவும் கிரிமினல் என்று தெரிந்தே அவர்களுக்கு பதவி வழங்கும் ஒரே கட்சி பாஜக தான் எனவும் விமர்சித்தார்.

கூட்டணிக் கட்சி
இப்படியாக பேசிக்கொண்டிருந்த திருமாவளவன் ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து, கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும் ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் கூறி பரபரப்பை பற்ற வைத்தார். பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அவர் இதன் மூலம் திமுகவை மறைமுகமாக சாடினார்.

முதல்வருக்கு வலியுறுத்தல்
கிரிமினல்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முதலில் முதலமைச்சர் கைவிட வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக பேசிய திருமாவளவன், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் ரவுடிகளை நம்பி அரசியல் செய்வார்கள் என பாஜகவை விமர்சித்தார். திருமாவளவனின் பேச்சு பாஜகவை நேரடியாகவும் திமுகவை மறைமுகமாகவும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.












Click it and Unblock the Notifications