திமுக பாணியில் விடுதலை சிறுத்தைகள்! திருமாவளவன் வகுத்த வியூகம்! மொத்தம் 4 மண்டலங்கள்!
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் பயிற்சிக் கூட்டங்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளார் திருமாவளவன்.
திமுக பாணியில் மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்களை நடத்தவுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு விசிக முழுவீச்சில் தயாராகி வருவதை அவர் உணர்த்தியுள்ளார்.

விசிகவில் அமைப்பு ரீதியாக தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து முகவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு;
'' 2024-நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து தேர்தல் பணிகளுக்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து முகவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக வட மாவட்டங்களில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளை வடக்கு மண்டலமாக பிரித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவrகளை நியமிக்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பின்வரும் பட்டியலில் கண்டவாறு மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இப்பணியை வெற்றிகரமாக முடித்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
வாக்குச் சாவடிக்கு ஒருவர் என்னும் அடிப்படையில் மேற்கண்ட 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்ற பயிற்சி முகாம் அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் வடக்கு மண்டலத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். '' இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக வாக்குச்சாவடி முகவர்கள் விவகாரத்தில் இப்போதே தனிக் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications