“திமுகவை மட்டுமே நம்பி நாம் இல்லை.. விசிக தான் துருப்புச்சீட்டு”.. நிர்வாகிகளிடம் பேசிய திருமாவளவன்
சென்னை: ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி இருக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணி கடந்த 2019 முதல் இணக்கமாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது திமுக கூட்டணிக்குள் சலசலப்புகளும் எழுந்து வருகின்றன.

திமுக கூட்டணியில் விசிக
விசிக தலைவர் திருமாவளவன், திமுக உடன் தான் கூட்டணியை தொடர்வோம் என திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து இன்று கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்தோடு பேசியுள்ளார் திருமாவளவன்.
ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், "கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது.
ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது.
திருமாவளவன் ஆதங்கம்
கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.
திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போல
ஆனால் எந்தப் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.
எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை.
துருப்புச்சீட்டு விசிக
எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு.
திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம்." என அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications