பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாம் கட்ட தலைவர்கள் நம் தலைவருக்கு நெருக்கடி தருகிறார்கள். மொத்தத்தில் திருமாவளவன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததை போன்ற ஒரு தவறான மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தனது முகநூல் பக்கத்தில், "நம் கட்சியை குறி வைத்து சில அறமற்ற ஊடகங்களும், பிழைப்புக்காக டிஜிட்டல் உலகில் கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர சின்ன சின்ன ஊடகவாதிகளும் தொடர்ந்து விவாதங்களை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

thirumavalavan vck

அண்மைகால அரசியல் முடிவுகளையடுத்து வேறெப்போதையும் விட நம் தலைவர் கட்சித்தோழர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார் என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கும் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போலவும், இரண்டாங்கட்ட தலைவர்கள் நம் தலைவருக்கு நெருக்கடி தருவதாகவும், மொத்தத்தில் தலைவர் கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததைப்போன்ற ஒரு தவறான மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இது ஒரு இயல்பான, எதேச்சையான உரையாடலா அல்லது திட்டமிடப்பட்ட அரசியல் சதியா என்ற கேள்வி எழுகிறது.

இரண்டாம் நிலை பொறுப்பாளர்கள் மீது அவதூறுகளும் அபாண்டமான பொய்செய்திகளும் அதி பயங்கரமாக பரப்பப்படுகின்றன. இது கட்சி மீதான பொறுப்புணர்ச்சியா அல்லது நம்மை பலவீனப்படுத்த முனைவோரின் காழ்ப்புணர்ச்சியா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு களமாட வேண்டிய தருணம் இது.

தோழர் பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச் போட்டவர்கள் அதைத்தொடர்ந்து தோழர் ஆளூர் ஷாநவாசுக்கு எதிராக குரைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம் தலைவர் கர்ஜித்ததையோ சட்டமன்றத்தில் நாம் சாதித்ததையோ அல்லது தமிழ்நாட்டில் நடந்த எந்த ஆணவப்படுகொலைகளையோ கடைசி பக்கத்தில் கூட பதிவுசெய்யாத ஜூனியர் விகடன் இதழ் கரிசனையோடு முதல் பக்கத்திலேயே அல்லது நடுப்பக்கத்திலேயே தலைவர் தடுமாறுகிறார் என்பதைப்போல விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறது.

உடனே சொல்லி வைத்தார்போல முகமூடியணிந்த சாதிய சனாதன சக்திகள் பக்கவாத்தியம் இசைத்து ஆர்பரித்து அணி திரள்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒருப்புள்ளியில் கை கோர்க்க தொடங்கியுள்ளனர் என்பதை நம்மால் தெளிவாக அவதானிக்க முடிகிறது.

1. இவர்கள் எதை நிகழ்த்த விரும்பினாலும் முதலில் அதற்கு சாதகமான ஒரு narrative வை மாய டிஜிட்டல் உலகில் கட்டமைக்கிறார்கள்.

2. பிறகு சமூக ஊடகங்களில் fake ID கள் மூலமாக அந்த உரையாடலை boost செய்கிறார்கள்.

3. இவர்கள் டார்கெட் செய்ய விரும்பும் கட்சியில் உள்ள சில அதிருப்தியாளர்களின் சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்து அவர்களை மூளை சலவை செய்கிறார்கள்.

4. அவர்கள் மூலமே அக்கருத்தை பரப்பி அதை அக்கட்சியின் பெரும்பான்மை கருத்து என்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

5. கூடவே கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர அரைவேக்காட்டு ஊடகவாதிகளை விட்டு அதை கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாத அருவருப்பான மொழியில் youtube debate ஆக்குகிறார்கள்.

6. யாரை இவர்கள் குறி வைத்தார்களோ அவர் அமைதியாகவே இருந்தாலும் கூட அவரை கழுவி கழுவி ஊத்துகிறார்கள்.

7. எப்படியோ ஒரு மாய நெருக்கடியின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டு அப்பழியை திமுக மீது வசதியாக போட்டு தங்கள் அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ( தேர்தலில் தோற்றுள்ள ஒரு கட்சியை தொடர்ந்து குதறுவது நம் எதிரி சாதிய சனாதன சக்திகள்தான் என்பதை மடை மாற்றம் செய்யும் ஒரு உத்தியே அன்றி வேறென்னவாக இருக்க முடியும் )

நவீன மாஃபியா கும்பலின் இந்த செயல் திட்ட சூத்திரங்களையும், அவை அரங்கேற்றப்பட்ட விதத்தையும் அண்மைகால நிகழ்வுகளோடு நடு நிலையாகயும் , பொறுப்புணர்வோடும் நாம் விருப்பு வெறுப்பின்றி பொருத்திப்பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

வெளிப்படையாய் தெரியும் எதிரிகளை எதிர்த்து களமாட கற்றுத்தேர்ந்த சிறுத்தைகள் உதிரிகளைப்போலத்தோன்றும் நம் கொள்கைப் பகைவர்களை அடையாளம் காண்பது மிக அவசியமானது.

சாதி வெறியும் சனாதன சூழ்ச்சியும் புதிய வடிவம் எடுத்துள்ளன. நவீன social media யுகத்திற்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.

அன்று குடிசையை எரித்தவர்கள் , இன்று நமது நம்பத்தன்மையை, நாற்பதாண்டுகால அரசியல் நன்மதிப்பை பொசுக்க கூடி விட்டார்கள்.

அன்று அவர்கள் கையில் தீ பந்தம். இன்று சோஷியல் மீடியாவும், fake Id களும் , பின்புலத்தில் கார்ப்பரேட் மாஃபியாகளும்.

காலில் செருப்பு போட்டதும் ஜீன்ஸ் அணிந்ததும் அன்று அவர்கள் கண்ணை உறுத்தியது.

இன்று நம் தலைவரின் கருத்தியல் ஆளுமையும், அவர் இந்திய அரசியலில் கவனம் பெறுவதும் அவர்களின் நெஞ்சாங்குலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தோழர்களே, நம் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க ஊளையிடும் இந்த you tuber களை கவனமாக கண்காணியுங்கள்.

எல்லாமே வலதுசாரி கும்பல்கள். கடந்த எந்த காலத்திலும் எந்த ஆணவப்படுகொலையின் போதும் சிறு குரல் எழுப்பாதவர்கள்.

நாம் எரிந்தபோதும் , நம் குரல்வளை அறுபட்ட போதும் கள்ள மவுனம் காத்தவர்கள். எந்த களத்திலாவது நம்மோடு இவர்கள் கை கோர்த்து நின்றதாக சாட்சி உண்டா?

அவர்கள் சொந்த ஊரில் உள்ள குரூரமான சாதிய பாகுபாடுகளை களைய மென்மையாகவாவது குரலெழுப்பியதுண்டா?

உண்மையிலேயே நம் தலைவர் மீதும் கட்சியின் மீதும் இவர்களுக்கு அக்கறை இருந்தால் இந்த கருத்துக்களை நேரில் நம் தலைவரோடு பகிர்ந்து இவற்றை சரி செய்ய முயற்சித்திருக்கலாமே. இவர்களின் நோக்கம் அதுவல்ல. மாய டிஜிட்டல் உலகில் பொய் தோற்றங்களை உருவாக்குவதும் அவற்றை நிஜ உலகில் பகை முரணாக்கி கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதுவுமே இவர்களுக்கு தரப்பட்ட அசைன்மென்ட். முடியாமல் போனால் கொஞ்ச நாள் வியாபாரமாவது தேறியதே என ஆறுதல் பட்டுக்கொள்வதும் தான் இவர்களின் நோக்கம்.

அன்பார்ந்த தோழர்களே !

இந்த சூழலில் சிலவற்றை நாம் மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

சாதி ஒழிப்புக்கான அரசியல் வரலாற்றில் கருத்தியல் வலிமை எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே தனிநபர் பாத்திரமும் மிக மிக முக்கியமானது என்பதையே புரட்சியாளர் அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பு நமக்கு உணர்த்துகிறது. அதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் நாம்.

தற்கால அரசியல் பயணத்தில் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எழுச்சித்தமிழரே கட்சியின் மையம். அவரே கட்சியின் உயிர். அவர் மட்டுமே.

அவரது தனிநபர் பாத்திரமே கட்சியை நூறு விழுக்காடு வழி நடத்துகிறது என்பது பல தருணங்களில் நிருபணமாகியுள்ளது.

யாராலும் அவருக்கு நெருக்கடியும் தர முடியாது. அவரை குழப்பவோ, தவறாக வழி நடத்தவோ இதுவரை யாரும் பிறக்க வில்லை.

இது கட்சியின் கடைசி தொண்டன் முதல் இரண்டாம் நிலை பொறுப்பாளர்கள் வரை எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்பதை விட எல்லோரும் நம்புவதும், விரும்புவதும் அதைதான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்சியின் கட்டமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பு முதல் ஒன்றிய நிர்வாகம் வரையிலான எல்லா பொறுப்புக்களையும் கலைத்து ஓராண்டு காலம் கட்சியை கட்டுக்கோப்பாய் வழி நடத்திவிட்டு பிறகு அந்த பொறுப்புக்களை நியமனம் செய்தவர் நமது தலைவர்.

ரத்தமும் சதையுமாய் பிசைந்து நம் தலைவர் கட்டி எழுப்பியுள்ள சிறுத்தைகளின் கோட்டையில்

சில செங்கற்களை உருவ முயற்சிப்பது வேறு யாருமல்ல....

முற்போக்கு முக மூடியணிந்த சனாதன சக்திகள்தான் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம்.

எல்லா கட்சியிலும் இருக்கும் உள் முரண்பாடுகளை விட மிக மிக குறைவான சில இடைவெளிகள் நமக்குள் இருக்கலாம் அதை தொடர்புடைய தோழரிடமோ அல்லது தம் தலைவரிடமோ பகிர்ந்து கொள்வதுதான் நாம் அமைப்பாய் இயங்குகிறவர்கள் என்பதற்கான அடையாளம். நம் தலைவருக்கு செய்யும் உண்மையான நன்றிக்கடன்.

தெரிந்தோ தெரியாமலோ அதை பொது வெளியில் பதிவிடுவது சாதிய சனாதன கும்பலின் வலையில் வலிய போய் சிக்குவதாகும். தொடர்ந்து அதையே செய்வது ஒரு நாள் அம்பலமாகும் அருவருப்பான உள்நோக்க அரசியலாகும்.

விழித்துக்கொள்வோம்.

எழுச்சித்தமிழர் இருக்கிறார்.

எந்த எதிரிகளாலும் நம்மை வீழ்த்த முடியாது. ஆனால் எதற்கும் கட்டுப்படாத உதிரிகளால் நாம் பலவீனப்பட வாய்ப்பிருக்கிறது.

இளையத்தலைமுறையின் யுத்தம்

கொள்கைப்புரிதலுடன் ....

தலைவரின் வழிகாட்டலோடு ....

இனி மாய உலகிலும் உக்கிரமாய் தொடரட்டும்.

முகமூடிகளை கிழிக்க நெருப்பு பரவட்டும்.

தோழமையுடன்

சிந்தனை செல்வன்

இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+