பெரியாரை விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது..இயக்குவது யாரென அறிவோம்.. திருமாவளவன் வார்னிங்!
சென்னை: பெரியார் பற்றி கொச்சையாக பேசக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருப்பதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறிய திருமாவளவன், அவர்கள் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக பெரியார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே ஈரோட்டிலேயே பெரியாரை வெங்காயம் என்று சீமான் பேசி இருந்தார்.

இந்த நிலையில் திண்டிவனம் அருகே மறைந்த விசிக நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது திருமாவளவன் பேசுகையில், நம்மை எல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ். நாம் எப்போதும் கொள்கைகளுக்கு முதன்மையாக கொண்டுள்ள இயக்கம்.
தேர்தல் என்பது நமக்கு இடையில் வந்து போகிற நிகழ்வு மட்டுமே. எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் நம் பயணத்தில் ஒரு இளைப்பாறல் தான். விசிக இன்னும் மக்கள் இயக்கமாக வலிமை பெற வேண்டும். இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.
பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யார் முயற்சித்தார்கள் என்பதை நாடு அறியும், நாமும் அறிவோம். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்று போய் வீழ்ந்தார்களே தவிர, பெரியாரை வீழ்த்த முடியவில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி.
ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. பெரியாரை அந்நியர் என்று சொல்பவர்கள், அம்பேத்கரை சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். பெரியாரை தமிழர் அல்ல, தமிழ் தேசியத்தின் பகைவர் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நாம் அனுமதித்தால், அம்பேத்கரை மராட்டியர் என்று சொல்லி அந்நியப்படுத்துவார்கள்.
அவருக்கும் தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாக கொண்ட தலைவர்கள் இல்லையா.. ரெட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் இல்லையா என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள். இதுவொரு அரைவேக்காட்டுத்தனமான அரசியல். மொழி வாத அடிப்படையில் இனவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் ஒரு முயற்சி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications