தலைவர் பிறந்த நாளுக்கு பணம் தா.. மறுத்த பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அடி, உதை: விசிக பிரமுகருக்கு வலை
சென்னை: திண்டிவனம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு நன்கொடை தராததால் ஆத்திரமடைந்த வி.சி.க தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Recommended Video
இந்த வீடியோ அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு, சின்ன வளவனூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

திருமாவளவன் பிறந்த நாள்
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி மகேஷ் கூட்டேரிப்பட்டு பகுதியில், பாரத் பெட்ரோல் பங்கிற்குச் சென்று அங்கு பணியில் இருந்த மேலாளர் ரவி சங்கரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக நன்கொடை வழங்குமாறு கேட்டுள்ளார். இந்த பெட்ரோல் பங்க், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டதாம்.

வந்ததே பாருங்க கோபம்
மகேஷ் கேட்டபோதிலும், மேலாளர் ரவி சங்கர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மகேஷுக்கு ரொம்பவே கோபமாம். அது எப்படி பணம் தராமல் இருக்கலாம் என்று தாறுமாறாக ஆத்திரப்பட்டுள்ளார்.

அடி, தாக்குதல்
பெட்ரோல் பங்க் மேலாளர் ரவிசங்கரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து மகேஷ் சென்று விட்டார். மீண்டும் விடவில்லை மகேஷ். 29ம் தேதி பெட்ரோல் பங்கிற்கு சென்ற மகேஷ் அங்கு நின்றிருந்த ரவி சங்கரிடம் பணம் கேட்டால் தர மாட்டியா? எனக் கேட்டு ஓங்கி பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்தும் கொலை வெறியோடு அவரை தாக்கியுள்ளார்.

போலீஸ் தேடுதல் வேட்டை
இந்தத் தாக்குதல் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது.இந்தப் பதிவினை ஆதாரமாக எடுத்துச் சென்று மயிலம் காவல் நிலையத்தில் மேலாளர் ரவிசங்கர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மயிலம் போலீசார் வி.சி.க நிர்வாகி மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications