காவல்துறை மீது கடும் கோபத்தில் திருமாவளவன்.. முதலமைச்சரை சந்தித்து முறையிட திட்டம்.. பின்னணி என்ன..?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியை போலீஸ்காரர்கள் அரசியல் கட்சியாகவே பார்ப்பதில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான காவல்துறையினர் அணுகுமுறை குறித்து , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வே காவல்துறை மீது திருமா அனல் கக்குவதற்கான காரணமாக கருதப்படுகிறது.

சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை நட அக்கட்சியினர் முயன்ற போது , அங்கு வந்த காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். காவல்துறையின் தடையை மீறி அங்கு வி.சி.க.வினர் தங்கள் கட்சி கொடிமரத்தை நட்டு கொடியேற்ற முற்பட்டதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு லேசான தடியடி வரை சென்றிருக்கிறது.

ஆவேசம்
இந்த விவகாரத்தை சேலம் மாவட்ட வி.சி.க. நிர்வாகிகள் திருமாவளவன் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து கொதித்துப் போனார். தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது போலீஸ் வன்மம் காட்டுவதாக ஆவேசப் பேட்டியளித்தார். மற்றக் கட்சிக்கொடிமரங்கள் உள்ள நிலையில் வி.சி.க.வுக்கு மட்டும் போலீஸ் அனுமதி மறுத்தது ஏன் என வினவினார்.

குற்றச்சாட்டு
மேலும், இந்த விவகாரத்தை இத்தோடு தாம் விடப்போவதில்லை எனக் கூறியுள்ள திருமா, இரண்டொரு நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்வை முறையிட இருக்கிறார். காவல்துறையிலும் சாதியக் கண்ணோட்டத்துடன் கூடிய நபர்கள் ஊடுருவி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மீதான திருமாவின் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூட்டணிக் கட்சி
ஏனெனில் முதலமைச்சர் ஸ்டாலின் வசம் தான் காவல்துறை உள்ளது. கூட்டணிக் கட்சியின் ஆட்சியில் அதுவும் கூட்டணிக் கட்சி தலைவர் முதலமைச்சராக உள்ள போது போலீஸ் துறை மீது திருமா அதிருப்தி கொண்டிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இதனிடையே சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசமின்றி செயல்பட காவல்துறைக்கு ஆட்சி மேலிடம் அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications