நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!
சென்னை: விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் மிகவும் கவலையில் இருக்கிறார். விசிகவின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளுக்கு தாவுவதால் ஏற்பட்ட விரக்திதான் அவரை கவலையடையச் செய்கிறது என்கிறார்கள் விசிகவினரே !
நடந்த முடிந்த தேர்தலில், தவெகவின் வெற்றிக்கு விசிகவில் உள்ள பட்டியலினத்த இளைஞர்களின் வாக்குகள் முக்கியப் பங்காற்றியது. விசிகவின் இளைஞர்கள் 90 சதவீதம் பேர் விஜய்யின் ரசிகர்கள். அதனாலேயே, விசிகவின் தலைமையின் உத்தரவுகளையும் மீறி அவர்களின் வாக்குகள் விசிலுக்குப் போனது. தவெகவின் ஒரு மீட்டிங்கில் பேசிய ஆதவ் அர்ஜுனா, விசிகவில் அண்ணன் திருமாவளவன் உள்பட 10, 20 பேர் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோருமே தவெகவுக்கு வந்துவிட்டனர் என்றார். அதேசமயம், விசிகவின் வாக்குகள் விசிகவுக்கு இடம் பெயர்ந்து விட்டன என்கிற உண்மையை அறிந்தததால் தான், தேர்தல் முடிந்ததும் ஒரு பேட்டியின் போது, விசிகவின் வாக்குகள் விசிகவுக்கே விழவில்லை. கூட்டணி கட்சிகளுக்கும் விழவில்லை'' என்கிற ரீதியில் கவலைப்பட்டுப் பேசியிருப்பார் திருமாவளவன்.

தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத போது, தங்களை ஆதரிக்க வேண்டும் என்று திருவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆதவ். அது குறித்து விசிகவின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக் குமார், வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பெருந்தலைகளுடன் திருமா ஆலோசித்த போது, வன்னியரசு தவிர மற்றவர்கள் தவெகவின் ஆஃபரை எதிர்த்தனர். குறிப்பாக, விசிகவில் 2 எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்திருக்கிறார்கள். இந்த வெற்றி என்பது தவெகவுக்கு எதிராக வாக்களித்தவர்களின் முடிவு. விஜய்க்கு எதிராக வாக்களித்தவர்களின் மனநிலைக்கு மாறாக, விஜய்யை ஆதரிப்பது ஆரோக்கியமற்றது என அவர்கள் வாதிட்டனர். திருமாவின் மனநிலையும் இதனை ஒப்புக்கொள்ளத்தான் செய்தது.
ஆனால், வன்னியரசு உள்ளிட்ட மற்றவர்கள், விசிகவின் வாக்குகள் இந்த தேர்தலில் விஜய்க்கு போய்விட்டது. அதனை தலைவரே வெளிப்படையாகச் சொல்கிறார். இனியும் விஜய்யை எதிர்ப்பது, கட்சியை கரைப்பதற்கு சமம். தவெகவுக்கு ஆதரவளித்து ஆட்சி அதிகாரத்திற்கு செல்வதன் மூலம், விசிக வின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற வகையில் பேசினர். விசிகவின் வாக்கு வங்கி முழுமையாக தவெக பக்கம் போகாமல் இருக்கவும், விசிக இப்போதும் வலிமையாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானித்தும், ஆட்சி அதிகாரம் இருக்கும் போதுதான் விசிகவை வலிமையாக கட்டமைக்க முடியும் என்பதாலும் தவெகவுக்கான ஆதரவு நிலை எடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த 1 மாத காலமாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து தவெகவில் இணையும் வைபவம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விசிகவின் நிர்வாகிகளும் தவெகவுக்கு தாவும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அடிமட்ட அளவில் ஆங்காங்கே இது நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விசிகவின் இளைஞர்கள் விஜய்யை நோக்கி சென்று விட்டனர். கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நிர்வாகிகளும் தாவும் முடிவில் இருப்பதை அறிந்து தான் கவலைப்படத் தொடங்கியுள்ளார் திருமா என்கிறார்கள் விசிகவினர்.
இது குறித்து மேலும் விசாரித்தபோது, ''அண்மையில் சிந்தனை செல்வன், ரவிக்குமார், வன்னியரசு உள்ளிட்டவர்களுடன் மிகச் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தார் திருமா. அப்போது, வன்னியரசிடம், முதல்வர் விஜய்யை உங்களால் எளிதாக அணுக முடிகிறதா? துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது ? ஆதவ், ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்களின் அணுகு முறைகள் எப்படி இருக்கிறது ? என்றெல்லாம் கேட்டார் திருமா. ஆட்சி, நிர்வாகம் பற்றி பேச்சு இருந்த நிலையில், ஒரு கட்டத்தில், மாற்று கட்சிகளிலிருந்து தவெகவில் இணையும் கூட்டம் குறித்து பேச்சு வந்துள்ளது.
அப்போது, விசிகவிலிருந்தும் தவெகவுக்கு செல்கிறார்கள். அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. நிர்வாகிகள் போனால் நமது கட்சிக்கு ரொம்பவே வீக் என சொல்லப்பட்டதுடன், இதனை தடுக்க வேண்டுமானால், விசிகவிலிருந்து வருபவர்களை தயவு செய்து தவெகவில் இணைத்துக் கொள்ளாதீர்கள் என ஆதவ்விடம் தலைவர் பேச வேண்டும் என வலியுறுத்தினர். தவெகவிற்கு விசிகவினர் செல்லும் சூழலை நினைத்து கவலைப்பட்ட திருமா, ஆதவ்வை தொடர்புகொண்டு, எங்கள் கட்சியிலிருந்து வருபவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாமே? கூட்டணி ஆட்சியில் விசிக இருக்கும் போது, விசிகவினரை சேர்த்துக் கொண்டால் அது ஆரோக்கியமாக இருக்காதுதானே... என சொல்லியிருக்கிறார் தலைவர்'' என்று விசிக தரப்பில் சொல்லபடுகிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications