"அண்ணாமலை குட்டிக்கரணம் போட்டாலும்.." திருமாவளவன் அடுத்து சொன்ன மேட்டர்! சுற்றிலும் ஒரே சிரிப்பலை
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் குறித்து விமர்சித்துப் பேசினார்.
இப்போது நாடு முழுக்க பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி, திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை "இந்தியா" கூட்டணி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கூட்டத்தில் இடப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
திருமாவளவன்: இதற்கிடையே இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தேசியளவில் நாங்கள் ஒரு கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணியில் வெற்றிகரமாக நாங்கள் பயணித்து வருகிறோம். இந்தக் கூட்டணியில் 5 கமிட்டியை நியமித்துள்ளோம்.
இதில் ஒருங்கிணைப்புக் குழு இட பங்கீடு குறித்து விவாதித்துள்ளனர். இதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு குழப்பமும் இல்லை. ஆனால், பாஜக தலைவர்கள் தான் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதற்கு எங்களால் பொறுப்பு ஏற்க முடியாது.
கடும் சாடல்: சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவே இந்த பாசிச அரசு பயன்படுத்துகிறது. இது முற்றிலுமாக சட்ட விரோதமானது. இதை நாங்கள் ஏற்கனவே பல முறை கண்டித்துள்ளோம். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அச்சுறுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்கும் என்றால் இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சிகளை இப்படி அச்சுறுத்திப் பணிய வைப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
இந்தக் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதைக் கண்டு பாஜகவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இதனால் இந்தியாவின் பிரதமர் என்பதற்குப் பதிலாக பாரத்தின் பிரதமர் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்கிறார்கள். அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இந்தியா என்ற பெயர் மீது நம்பிக்கையும் இல்லை உடன்பாடும் இல்லை.
பெயர் மாற்றம்: இந்து ராஷ்டிரம் என்று பெயர் வைக்க வேண்டும் என்பதே அவர்கள் இலக்கு. இப்போது இந்தியா பெயரை பாரத் என்று மாற்றினாலும் அதுவும் தற்காலிகமாகவே இருக்கும். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்றுவார்கள். இதுதான் கோல் வாக்கர், சாவர்க்கர் கனவு.
பொதுமக்கள் இதுபோன்ற கோமாளித்தனமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. அதுதான் 2023 நாடாளுமன்றத் தேர்தல். 10 ஆண்டுகளில் நாட்டை வல்லரசாக மாற்றுவோம் என்ற மோடி அரசு, இன்று பெயரை மாற்ற முயல்கிறார்கள். இதுதான் அவர்களின் ஒரே சாதனை" என்று அவர் தெரிவித்தார்.
கிண்டல்: அண்ணாமலை நடைப்பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நீங்கள் இந்த கேள்வி கேட்ட போதுதான், அண்ணாமலை நடைப்பயணம் போவதே தெரிகிறது" என்றார். அவர் இப்படி சொன்னதும் அருகே இருந்த விசிக நிர்வாகிகள் சிரிப்பலையில் மூழ்கினர்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், "இந்த நடைப்பயணம் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்னதான் அவர் குட்டிக்கரணம் போட்டாலும், தரையில் படுத்து உருண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக வேர் பிடிக்காது. சனாதன அரசியலுக்கு ஏற்ற மண் இல்லை தமிழ்நாடு. இது நல்ல கருத்துகள் வளரும் கரிசல் மண். இதில் சனாதனம் என்ற நச்சுக்கு இடமில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications