தேசிய கட்சியாகிறதா விசிக? திருமா போடும் மாஸ்டர் பிளான்? திகைப்பில் திமுக!
சென்னை: தேசிய கட்சியாக வளருகிறதா விசிக என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் மற்ற சில கட்சிகளும் கூட்டணி அமைக்கவே போராடி வருகின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரிய கட்சியான அதிமுக கூட்டணிக் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு திமுக கூட்டணியிலிருந்து யாரேனும் பிரிந்து வருவார்களா? எனக் கனவு கண்டு கொண்டிருக்கிறது.

அதேபோல் பாமக வந்தால் நன்றாக இருக்கும் எனக் காத்திருக்கிறது. மறைமுகமாக அதிமுக தரப்பிலிருந்து விசிகவுக்கு தூது விடப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில், போயஸ் கார்டன் சந்து வழியே எப்படியாவது ஜெயலலிதாவை ஒருமுறை சந்தித்துவிட முடியாதா என்று கடைசி நேரம் வரை காத்திருந்த கட்சிகள், இன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சுற்றலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தளவுக்கு அதிமுக கூட்டணி பலவீனப்பட்டுள்ளது. அந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமி மிகத் தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார். முதலில் பாஜகவைக் கழற்றிவிட்டார். பின்னர் தேசிய கட்சிகளே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
ஒருவகையில் அவர் காங்கிரஸ் வரலாம் என நினைத்திருக்கலாம். அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்பதையும் அவர் அறிவார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர். அவருக்கு ராகுலிடமும் சோனியா காந்தியுடனும் நல்ல தோழமை ஸ்டாலினுக்கு உள்ளது.

அதுவும் இல்லாமல் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் என அந்தக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்தது. உரசலே இல்லாத போது திமுகவைக் கைகழுவும் எண்ணத்திற்குக் காங்கிரஸ் மேலிடம் வரப்போவதில்லை. அதை உணர்ந்துதான், தேசிய கட்சிகளுடன் கூட்டணியே இல்லை என பில்ட் அப் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் வேறு பரிமாணத்தை எடுத்துள்ளது விசிக. ஒரு குறிப்பிட்ட சமுக மக்களின் கட்சியாக மட்டுமே இருந்த அடையாளத்தை அந்தக் கட்சி உடைத்துக் கொண்டே வருகிறது. வன்னியர் சமுகத்திலிருந்து ஒரு எம்.எல்.ஏ. அடுத்து இஸ்லாமியச் சமுகத்திலிருந்து ஒரு எம்.எல்.ஏ என்று அது பொதுநீரோட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.
அதன் அடுத்த கட்டமாகப் பொதுத்தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் அக்கறைகாட்டி வருகிறார் திருமாவளவன். அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, 'நாங்கள் பல காலமாகப் பொதுத்தொகுதிகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்' என்று ஒரு பட்டியலைப் போட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அதைவிட அதிரடி, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வெற்றியே முக்கியம் என்பதால், அவரது கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைத்தார்.
அப்போது திமுக தலைமை திருமாவையும் உதயசூரியனில் போட்டியிட அழுத்தம் தந்ததாக ஒரு கருத்து நிலவியது. அதில் உண்மை இருக்கிறது. பேசப்பட்டது என்பதை திருமாவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த முறை நாங்கள் தனிச் சின்னத்தில் நிற்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருக்கிறார். இது அந்தக் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்தளவில் வரவேற்கப்பட வேண்டிய முடிவும்.
அதைவிட முக்கியமான விசயம், இந்த மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் போட்டியிட விசிக முடிவு செய்துள்ளது. ஆகவே, தேர்தல் ஆணையத்தில் பானை சின்னத்தைக் கேட்டுப் பெற வேண்டி அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

இது குறித்து இரண்டு விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, அந்தக் கட்சி 5 மாநிலங்களில் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது. திமுகவேகூட 5 மாநிலங்களில் போட்டியிட்டதில்லை. அந்தக் கட்சி இதுவரை மாநிலக் கட்சியாகவே உள்ளது.
அதிமுக வேறு மாநிலங்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. குறிப்பாக அதிமுக கட்சி தொடங்கிய பிறகு அக்கட்சிக்கு முதல் முதலமைச்சர் புதுச்சேரியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப் போல் கர்நாடகா சட்டசபையில் 2 எம்.எல்.ஏக்களை அக்கட்சி ஒரு காலத்தில் கொண்டிருந்தது.
ஆனால், அதன் தாய்க் கட்சியான திமுக தமிழ்நாட்டைத் தாண்டியது இல்லை. அது என்னதான் தென் இந்தியா முழுமைக்கும் திராவிடக் கொள்கைப் பேசினாலும் தமிழ்நாட்டை விட்டு அக்கட்சி தாண்டியதில்லை.
ஆனால், இன்றைக்கு 5 மாநிலங்களில் போட்டியிடுகிறோம் என்று திருமாவளவன் கூறியிருப்பதன் மூலம், அவர் மறைமுகமாக நாங்கள் பல மாநிலங்களில் வளர்ந்துள்ளோம் என்பதை திமுக தலைமைக்கு உணர்த்த முயன்றிருக்கிறார். மற்றொன்று பழைய நிலையில் சீட் பேரம் என்பது இனி இல்லை என்பதையும் அவர் உணர்த்தியிருக்கிறார்.
அடுத்து பழைய மாதிரி ஒரு மாநிலக் கட்சியாகக் கூட விசிகவை அங்கீகரிக்காமல் தங்களின் சின்னத்தில் போட்டியிட திமுக அழுத்தம் தர முடியாது என்பதையும் புரியவைத்திருக்கிறார்.
ஆக, இன்றைக்கு மாநிலக் கட்சியாகத் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சியும் 5 மாநிலங்களில் போட்டியிடவில்லை. அந்தச் சாதனையை திருமாவளவன் செய்திருக்கிறார்.
ஒரு சீட்டு என்ற நிலையை மாற்றி, விசிக இந்த மக்களவைத் தேர்தலில் 4 இடங்களைக் கேட்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதில் ஒன்று பொதுத் தொகுதி.
அதில்தான் ஆதவ் அர்ஜூன் களம் இறங்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் முழு உண்மை இருப்பதைப்போல் தான் தெரிகிறது. கிட்டத்தட்டப் பல கோடிகளை அவர் விசிகவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். அப்படி ஒரு நன்கொடையாளர்கள் ஒரு கட்சிக்குத் தேவை. அதை உணர்ந்தே ஆதவ் அர்ஜூனை உள்ளே இழுத்துள்ளது விசிக.

இந்த முறை தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடக உள்ளிட்ட 5 மாநிலங்களில் களம் காண்கிறது விசிக. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் என்பது முக்கியம். முழுமையாகத் தென் இந்தியா முழுக்க வேட்பாளர்களைக் களம் இறக்குகிறது விசிக.
தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணியில் விசிக உள்ளது. தேசிய அளவில்கூட அதே கூட்டணியில்தான் விசிக இருக்கிறது. இதே கூட்டணிதான் தமிழ்நாடு அல்லாத பிறமாநிலங்களிலும் தொடருமா? அல்லது ஆம் ஆத்மி கட்சியைப் போலத் தனித்து நிற்கப் போகிறதா?
கூட்டணி என்றால் பிறமாநிலங்களில் எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது? அங்கே எத்தனை சீட்டுகளை விசிக பெற உள்ளது. பிற தென் மாநிலங்களில் கூட்டணி அமைத்து சீட்டு கேட்டுப் பெறும் அளவுக்கு அக்கட்சி பலமாக அங்கே உள்ளதா? என்பது பற்றிய விளக்கங்கள் எதுவும் விசிக சார்பாக அளிக்கப்படவில்லை.

டெல்லித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்ற திருமாவளவன், அங்குள்ள அதிகாரிகளைக் கூட சந்திக்க முடியாமல் பிற அதிகாரிகளிடம் மனுவை அளித்துவிட்டு வந்துள்ளார்.
ஏன் முறைப்படி அனுமதி பெற்ற பிறகு தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் செல்லவில்லை. தேசிய கட்சியாக வளர உள்ள ஒரு கட்சியின் தலைமைக்கு அந்த அடிப்படை விவரங்கள் கூட தெரியாதா எனப் பல கேள்விகள் விளக்கப்படாமல் உள்ளன.
எப்படிப் பார்த்தாலும் விசிகவுக்கு இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு ஜாக்பாட் காத்திருக்கிறது.
-
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications