"காடுவெட்டி".. தலை வேறு, உடல் வேறாம்.. செம காமெடி.. "அய்யா"கிட்ட சொல்லலாமே.. கொதிக்கும் வன்னிஅரசு
காடுவெட்டி குரு ஆதரவாளரின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் வன்னி அரசு
சென்னை: "நாளைக்கு ஒரு தலையை காணோம், கையை காணோம்.. காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க" என்று வீடியோ போட்டு மிரட்டல் விடுத்த காடுவெட்டி குரு மகன் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.
"ஜெய்பீம்" படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதேசமயம், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக கூறி சர்ச்சைகள் எழுந்தது.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார்.. இதற்கு சூர்யாவும் விளக்கம் தந்து பதில் சொல்லி இருந்தார்..
ஜெய் பீம்: பாரதிராஜாவிற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!
சுதந்திரம்
அத்துடன், "படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று பதிலடி தந்திருந்தார்.. ஆனாலும் ஆத்திரம் அதிருப்தி குறையாத பாமக தொடர்ந்து வருத்தத்திலேயே உள்ளது.. இதனால், சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அறிவித்து, அது தொடர்பான சர்ச்சைகள் அடங்காமல் வந்தவண்ணம் உள்ளது. இதனால், சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பாமக தொண்டர்கள்
எனினும் சோஷியல் மீடியாவில் பாமக தரப்பினர் தொடர்ந்து சூர்யா தரப்பினருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.. எங்க ஊருக்கு வந்தால் நாங்களே அடிப்போம்.. ஒரு லட்சம் ரூபாய் பணமெல்லாம் வேணாம் என்று சில பாமக தொண்டர்கள் ட்வீட் போட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது... அதில் காடுவெட்டி குருவின் மகன் பேசுகிறார்.. அவருக்கு பின்னால் காடுவெட்டி குரு போட்டோ உள்ளது.
காடுவெட்டி குரு
வீடியோவில் பேசும்போது, "தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்காதீங்க.. அவ்ளோதான் நான் சொல்லுவேன்.. எல்லாரும் ஒரு மைக் கிடைச்சதுங்கறதுக்காக, யாரை விமர்சனம் செய்றோம், என்ன விமர்சனம் செய்றோம் என்பதே தெரியாமல், உங்க இஷ்டத்துக்கு பேசறீங்களே, நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால், அப்போ உங்களால சமாளிக்க முடியுமா? இன்னைக்கு காடுவெட்டியாரை நேசிக்கிற, காடுவெட்டியாரின் விசுவாசிகள் லட்சக்கணக்கான பேர் வெளியில் இருக்காங்க..
தலையை காணோம்
நாளைக்கு அப்பறம் ஒரு தலையை காணோம், கையை காணோம்.. காலை காணோம்ன்னு சொல்லிட்டு, யாரும் தேடி வந்து எங்களை கேட்டுடாதீங்க.. காவல்துறைக்கும் அதைதான் நாங்க சொல்றோம்.. நாளைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்ததுன்னா, எங்களை தேடி யாரும் வரவேணாம்.. ஏன்னா, நீங்க பேசற பேச்சு அப்படி இருக்கு" என்று வீடியோ முழுக்க மிரட்டல் விடுக்கும் தொனியிலேயே பேசியுள்ளார்.. அவரது இந்த பேச்சுதான் இணையத்தில் 2 நாட்களாக வைரலாகி கொண்டிருக்கிறது..
மருத்துவர் அய்யா
இதற்குதான் விசிகவின் வன்னியரசு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. அதில், "அடேங்கப்பா தலை வேறு, உடல் வேறாம். நல்லா காமெடி பன்றான். இந்த வீரத்த இவன வெட்டுன பாமக கும்பலிடம் சொல்லி இருக்கலாமே... தூண்டி விட்டு தாக்குதல் நடத்திய மருத்துவர் அய்யாவிடம் சொல்லி இருக்கலாமே. இந்த மாதிரி காலிப்பயல்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் தளைப்படுத்தவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. அத்துடன் இந்த வீடியோவை தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்து, தமிழக காவல்துறைக்கும் டேக் செய்துள்ளார் வன்னி அரசு.
திரௌபதி
ஏற்கனவே, ஜெய்பீம் படத்துக்கு எதிராக கொந்தளித்து, மிரட்டல் விடுக்கும் பாமகவினருக்கு, வன்னி அரசு பலமுறை ட்வீட் போட்டு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்.. குறிப்பாக, "திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிசட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்?" என்றும் வன்னியரசு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று மற்றொரு ட்வீட் போட்டு போலீசுக்கே டேக் செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.